சினிமா

“சமூக வலைத்தளங்களில் எல்லாருமே விமர்சகர்கள்தான்” - ஜெயம் ரவி

webteam

சமூக வலைத்தளங்களில் எல்லோரும் கணக்கு வைத்துக்கொண்டு விமர்சகர்களாக மாறிவிட்டார்கள் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்

‘தனி ஒருவன்2’ படம் பற்றி...?

“எனது அண்ணன் ராஜா ‘தனி ஒருவன்2’ படத்துக்காக  ஸ்கிரிப்ட் தயாரித்து கொண்டுதான் இருக்கிறார். படத்தின் கதைக் கருவை ஒருவரியில் விவரித்தார். அவர் எழுதிய சில காட்சிகளையும் என்னிடம் விவரித்தார். தனி ஒருவனின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் நீட்சியாக இருக்குமா என நிறைய பேர் எங்களிடம் கேட்கிறார்கள். ‘தனி ஒருவன்’ முதல் பாகத்தின் வெற்றியை நாங்கள் இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை. இரண்டாம் பாகமும் நிச்சயம் ரசிகர்களுக்கு மாறுபட்ட உணர்வை தரும்.”

‘தனி ஒருவன்2’ உங்களின் 25வது படமாக அமையுமா?

“நம்பிக்கை இருக்கிறது. திரைத்துறையில் அழகான பயணத்தை தொடங்கி நான் சென்று கொண்டிருக்கிறேன். எனது சினிமா வாழ்க்கையில் பல வெற்றித்தோல்விகளை கண்டிருக்கிறேன். ஆனால் வீழ்ந்துவிடவில்லை. எனது முதல் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஆனாலும் எனது அடுத்தடுத்த படங்களை மக்கள் வரவேற்றார்கள்; எனக்கு ஆதரவு அளித்தார்கள். கடந்த 3 ஆண்டுகளாக பெரிய அளவில் படங்கள் எனக்கு ரிலீஸ் இல்லை. இந்த இடைவெளி எதிர்பாராதவிதமாக நடந்த ஒன்றுதான். 

இது மாதிரியான காலங்களை எப்படி கடந்து செல்வது என்பது குறித்து சீனியர் நடிகர்களிடம் ஆலோசித்துள்ளேன். ஒருமுறை நடிகர் விக்ரமிடம் பேசினேன். அவர் என்னிடம் மூச்சுப்பயிற்சி செய்ய சொன்னார். அப்போது எனக்கு அது புரியவில்லை. எந்தப்பிரச்னை என்றாலும் அமைதியாய் இருந்து கடந்து செல்லவேண்டும் என்று அதற்கு அர்த்தம். எனக்குப் பிறகுதான் புரிந்தது. அவர் பல தடைகளை தாண்டி சினிமாவில் சாதித்தவர். மக்கள் அவரை கொண்டாடுகிறார்கள். நான் நேர்மறையாக இருக்கவே கற்றுக்கொள்கிறேன். தோல்விகளை கண்டு அச்சம் கொள்வதில்லை. 

இன்றையக்கு படத்தின் வசனங்களும், காட்சிகளும் அதிக அளவில் மக்களால் விமர்சனம் செய்யப்படுகிறதே? 
அதை எப்படி பார்க்கிறீர்கள்? 

“சமூக வலைத்தளங்களால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. ஒரு படம் செய்கிறோம் என்றால் அதை நாம் விரும்பியே செய்கிறோம். ஆனால் அதே கதை எல்லாருக்கும் பிடிக்கும் என்ற கட்டாயமும், தேவையும் இல்லை. ஆனால் படம் என்பது ரசிகர்களுக்கானது. அவர்களை திருப்திப்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்களில் எல்லாருமே விமர்சகர்களாக இருக்கிறார்கள். நிறைய ட்ரோல்ஸ் வருகிறது. அதை நம்மால் தடுக்க முடியாது.  அதை எப்படி சமாளித்து கடந்து போகிறோம் என்பதுதான் முக்கியமானது. ‘மிருதன்’ படத்துக்கே பல கலவையான விமர்சனங்கள் வந்தன. குழந்தைகள் எப்படி படத்தை பார்க்க முடியும் என்று சிலர் கேட்டார்கள். புது முயற்சி என்று சிலர் பாராட்டினார்கள். சில கேலிகளும் கிண்டல்களும் நம்மை காயப்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் சமூக வலைத்தளங்களில் இருந்து நாம் பலவற்றை கற்றுக்கொள்ள முடியும்.” 

கதையில் நீங்கள் கவனத்தில் கொள்வது என்ன?

“ஒவ்வொரு படமும் நடிகர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு அனுபவம்தான். ஒரு படம் வெற்றி பெற்றால் நாம் அந்த வெற்றி பார்முலாவையே கடைபிடிக்க முடியாது. ரசிகர்களுக்கு விதவிதமான கதையம்சங்களை கொடுக்க வேண்டி இருக்கிறது. ‘தனி ஒருவன்’ பொழுதுபோக்கு என்பதை தாண்டி சமூக பிரச்னைகளையும் பேசியது. அப்படியான நல்ல படங்களில் பணியாற்றவே விரும்புகிறேன்.” என்று  டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.