‘திருமதி செல்வம்’ சீரியலில், கதாநாயகன் செல்வத்தின் தந்தை ‘பூங்காவனம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர், நடிகர் வி.சி.ஜெயமணி. இது தவிர,சிறகடிக்க ஆசை, மெட்டி ஒலி, கல்யாணப் பரிசு உள்ளிட்ட பல தொடர்களிலும், 150-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிறு வயதிலேயே கலைத் துறையில் ஆர்வம் காட்டி, மேடை நாடகங்கள் வாயிலாகத் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார்.
நடிகராக மட்டுமன்றி, சின்னத்திரையில் பல தொடர்களில் இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்த நிலையில், வி.சி.ஜெயமணி மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது திடீர் மறைவு செய்தி சின்னத்திரை வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.