சினிமா

கந்துவட்டி தீக்குளிப்பு சம்பவத்தை பார்த்த போது கோபம் வந்தது: நடிகர் கார்த்தி

கந்துவட்டி தீக்குளிப்பு சம்பவத்தை பார்த்த போது கோபம் வந்தது: நடிகர் கார்த்தி

webteam

கந்துவட்டியால் ஒரு குடும்பம் தீக்குளித்து இறந்தபோது எனக்கு கோபம் வந்தது என்று நடிகர் கார்த்தி தெரிவித்திருக்கிறார். இவர் நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் வருகின்ற 17ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அவர் பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், தீரனில் முற்றிலும் உண்மையான ஒரு போலீஸ் அதிகாரியை நீங்கள் பார்க்கலாம். சாதாரணமாக போலீஸ் அதிகாரி ஒருவர் கேஸ் பைலை படிக்கும் போது எப்படி ரியாக்ட் செய்வாரோ அதே அளவுதான் தீரனும் இந்த படத்தில் ரியாக்ட் செய்வார். இதை நான் சிறுத்தை படத்திற்காக ஒரு போலீஸ் அதிகாரியை சந்தித்த போது சாதாரணமாக எதையும் எதிர்கொள்ளும் அவருடைய தன்மை எனக்கு பிடித்திருந்தது. அதைத்தான் பல காட்சிகளில் தீரனில் நான் கடைபிடித்துள்ளேன். இயக்குநருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. போலீஸ் அதிகாரிகளுக்கு தடங்கல் என்பது கிரிமினல் பக்கத்தில் இருந்து மட்டும் வராது. அதிகாரிகளிடமிருந்து, சமூகத்திடமிருந்து கூட வரும். இதையெல்லாம் தாண்டித்தான் ஒவ்வொரு கேஸையும் அதிகாரிகள் கையாள வேண்டியுள்ளது. 

நாம் அனைவரும் 8 மணி நேரம் வேலை செய்ய சம்பளம் வாங்குகிறோம். ஆனால் போலீஸ் அதிகாரிகள் ஒரு நாளைக்கு 22மணி நேரம் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது. மற்ற மாநில போலீஸ் அதிகாரிகளை விட தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரிகள் மேல் அனைவருக்கும் பயம் உண்டு. போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையாக தீரனின் கதையை நாம் சொல்கிறோம். தீரனின் வாழ்க்கையை மாற்றிய ஒரு கேஸ்தான் இந்த படத்தின் கதை. இப்போதுள்ள இளம் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் மீசை இல்லாமல்தான் இருக்கிறார்கள். விட்டால் அவர்கள் எல்லாம் சினிமாவில் டூயட்டே பாடலாம். நிஜமாக இன்றைய போலீஸ் அதிகாரிகளின் தோற்றம் எப்படி இருக்குமோ அப்படித்தான் என்னுடைய தோற்றமும் இந்த படத்தில் இருக்கும். ராஜஸ்தான் மாதிரியான ஒரு flat landல் நாம் ஒளிந்திருந்து எதிரிகளை பிடிக்க முடியாது. மண்ணுக்குள் மறைந்துதான் பிடிக்க முடியும். அதனால்தான் ட்ரைலரில் அப்படி ஒரு காட்சி இடம்பெற்றது. அது கிராபிக்ஸ் அல்ல நிஜம்தான். நம் சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகளை காணும் போது எனக்கு கோபம் வரத்தான் செய்கிறது. 
சமீபத்தில் கந்துவட்டி பிரச்சனையால் தீக்குளித்து பெண் குழந்தையோடு இறந்த சம்பவத்தை பார்த்த போது கோபம் வந்தது. இதை போன்ற சம்பவத்தை பார்க்கும் போது நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றும்” என்றார்.