சினிமா

சென்னையிலும் விஜய் விலையில்லா விருந்தகம்: ஏழைகளுக்கு உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்

sharpana

தஞ்சாவூரைத் தொடர்ந்து சென்னையிலும் ‘விஜய் விலையில்லா விருந்தகம்’ மூலம் ஆதரவற்ற ஏழைகளுக்கு தினமும் உணவளிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளனர் தென் சென்னை விஜய் மக்கள் இயக்கத்தினர்.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் வசிக்கும் ஆதரவற்ற மக்களும் ஏழைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, உதவிக்கரம் நீட்டி விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உணவு, மளிகைப்பொருட்கள், காய்கறி, கிருமி நாசினி தெளிப்பு போன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

ஆதரவற்றவர்களுக்கு மட்டுமல்லாமல், கொரோனாவுடன் மக்களைக் காக்க போராடிவரும் முன்களப் பணியாளர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் 1 கிராம் தங்க நாணயம் எல்லாம் அளித்து ஊக்கப்படுத்தினர்.

ஆனால், கொரோனா முதல் அலையின்போதே கடந்த ஒரு வருடமாக தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் ‘விஜய் விலையில்லா விருந்தகம்’ ஆரம்பித்து ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகிறார்கள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர்.

இவர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்ததை அடுத்து, அதன் தொடர்ச்சியாக தற்போது விஜய் விலையில்லா விருந்தகத்தை தென் சென்னையிலும் இன்று முதல் ஆரம்பித்து உணவு வழங்கி வருகிறார்கள். தென் சென்னை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் கேவி.தாமுவுடன் விஜய் ரசிகர்கள் இணைந்து ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகிறார்கள். உணவுடன் இனிப்பும் வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.