சினிமா

பரபரப்பான இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஜீவி நடிகர் வெற்றியின் அடுத்தப்படம்!

webteam

‘எட்டு தோட்டாக்கள்’ புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் ‘இரவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

எம்10 புரொடக்ஷன்ஸ் சார்பில், எம்.எஸ். முருகராஜ் தயாரிப்பில், ‘பக்ரீத்’ படப்புகழ் இயக்குநர் ஜெகதீசன் சுபு புதியப் படம் ஒன்றை இயக்கி வருகிறார். ‘எட்டு தோட்டாக்கள்’, ‘ஜீவி’ பட நாயகன் வெற்றி, பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷு, கல்கி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள்னர். கோஸ்ட் த்ரில்லர் டிராமா திரைப்படமான ‘இரவு’ படத்தின் படப்பிடிப்பு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

வீடியோ கேம்ஸ் டிசைன் செய்யும் நாயகன் வாழ்வில், அவன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள், நேரில் வர ஆரம்பிக்கிறது. அதை தொடர்ந்து ஓர் இரவில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களே, இந்தத் திரைப்படம். பல பேய்க்கதைகள் வந்திருந்தாலும், இப்படம் உணர்வுகளை மையமாக கொண்டு, பரபரப்பான திரைக்கதையில், ஒரு திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது.

ஓர் இரவில் நடக்கும் இக்கதை, முழுக்க சென்னை ஈ சி ஆர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு ஸ்ரீனிவாஸ் தயாநிதி ஒளிப்பதிவு செய்கிறார். அரோல் கரோலி இசையமைக்கிறார். சிஎஸ் பிரேம் குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.