நடிகர் சங்க நில மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை கைது செய்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலத்தில் இருந்த நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை நடிகர் சங்கத்தில் பதவி வகித்த போது ராதாரவியும், சரத்குமாரும் போலி ஆவணங்கள் தயாரித்து விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து நடிகர் சங்கத் தலைவர் விஷால் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த 2017ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். ஆனால் இந்த புகார் குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி விஷால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிய வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட 4 பேர் மீது கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் வழக்கை சரியாக விசாரிக்கவில்லை எனக்கூறி, விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என நடிகர் விஷால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நடிகர் சங்க நில மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை கைது செய்து விசாரிக்க காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். மேலும் விசாரணையின் இறுதி அறிக்கையை 3 மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இவ்வழக்கு விசாரணையை காஞ்சிபுரம் எஸ்.பி. கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.