சினிமா

கெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு

webteam

கெளதம் மேனன் கூட்டணியில் மீண்டும் சிம்பு நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. 

சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அச்சம் என்பது மடைமையடா’. இதனை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கி இருந்தார். இந்தப் படம் சிம்புவிற்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. அதே போல் ‘விண்ணை தாண்டி வருவாயா’ படமும் சிம்புவின் நடிப்பில் வேறு ஒரு மென்மை காதலை நிரூபித்திருந்தது. ஆகவே சிம்புவின் ஒட்டுமொத்த சினிமா கேரியரை முற்றிலும் மாற்றி காட்டிய இப்படங்கள் அவரது வாழ்நாளில் முக்கியமானதாக கூறப்பட்டது. பாக்ஸ் ஆபீசில் பெரிய வெற்றி படங்களாகவும் இவை பேசப்பட்டது. 

இந்நிலையில் மூன்றவது முறையாக நடிகர் சிம்புவுடன் கெளதம் மேனன் இணைய இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்தப் புதிய படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்க இருக்கிறார். இந்த மேஜிக் கூட்டணி பற்றி செய்தி வெளியானது முதல், சிம்புவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் உற்சாகத்தில் குதித்துள்ளனர். 

இது சம்பந்தமாக இயக்குநரின் நெருங்கிய வட்டாரம், “இந்தப் படம் கமர்ஷியல் கலந்த ஆக்‌ஷனாக இருக்கும். முதலில் சுந்தர்.சி படத்தை முடித்த பிற்பாடு, சிம்பு இதைத் தொடங்க இருக்கிறார். அதற்குள் கெளதம் மேனன், ‘துருவ நட்சத்திரம்’ படத்தை முடித்து விடுவார். சிம்பு படத்தின் தலைப்பு அடுத்த மாதம் வெளியாகும்” என கூறுகிறது. 

இந்தப் புதிய படம் பற்றிய செய்தியையொட்டி டவிட்டரில் சிம்பு, ரஹ்மான், கெளதம் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வேகமாக பரவி வருகிறது.