செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களுக்கு, முதலமைச்சர் முக.ஸ்டாலின் வீட்டுமனை பட்டா மற்றும் சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியதற்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
தீபாவளியையொட்டி நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்கள் 81 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, மற்றும் சாதிச் சான்றிதழ்களை முதல்வர் முக.ஸ்டாலின் ரூ. 4.5 கோடி மதிப்பீட்டில் 252 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதற்கு, பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்துவரும் நிலையில், நடிகர் சூர்யா பாராட்டியிருக்கிறார்.
”முதல்வர் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும் எளிய மக்களின் தேவை அறிந்து உடன் செயலில் இறங்கிய வேகம் எங்களை பிரமிக்க வைக்கிறது. இந்த தீபாவளி திருநாளை மறக்கமுடியாத நன்னாளாக மாற்றிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.அன்புடன், சூர்யா” என்று நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கிறார்.