சினிமா

”என் மீது நம்பிக்கை வைத்த வெங்கட் பிரபுவுக்கும் சிம்புவுக்கும் நன்றி” - யுவன் ஷங்கர் ராஜா

sharpana

’மாநாடு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”எல்லாப் புகழும், எல்லாம் வல்ல இறைவனுக்கே. இறைவனின் கருணைக்கு நன்றி சொல்லும், எனது கனிந்த இதயத்துடன், இந்த வெற்றிக்கு காரணமான அனைனவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இத்திரைப்படம் தனிப்பட்ட முறையில், என் இதயத்திற்கு நெருக்கமானதும், மிகவும் சிறப்பு மிகுந்ததுமான ஒரு படைப்பாகும். வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் டி.ஆர் ஆகியோருடன் தனித்தனியே இணைந்த, எனது முந்தைய படங்களில் எண்ணற்ற வெற்றி பாடல்கள் இருந்தன, ஆனால் எங்கள் கூட்டணியில் ஒரு திரைப்படத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்கள் இருப்பது இதுவே முதல் முறை. ஆனாலும், இசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் பிஜிஎம்மில் எனது புதிய முயற்சிகளை கூர்மையாக கவனித்து, அவற்றை தனித்த முறையில் பாராட்டியது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தது.

என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் ஆகியோருக்கு நன்றி. எனது நண்பர் மற்றும் சகோதரரான சிலம்பரசன் இந்த திரைப்படத்திற்காக தந்த ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பிற்காக, உழைப்பிற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவரது உழைப்பிற்கும் முயற்சிக்கும் அனைத்து தரப்பிலும் இருந்து நேர்மறையான விமர்சனங்கள் வருவதை கண்டு நான் இதயம் நெகிழ்ந்து மகிழ்கிறேன். எஸ்.ஜே.சூர்யா சார் தனது முழு நடிப்பு ஆற்றலையும், இந்தப் படத்தில் பயன்படுத்தியதன் மூலம், படத்திற்கு வலுவானதொரு தூணாக மாறியுள்ளார். மாநாடு படத்தினை சிறப்பான ஒரு படைப்பாக மாற்ற, ஒவ்வொரு கலைஞர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். எனது இசை பற்றியும் மற்றும் படம் பற்றிய நேர்மறையான செய்தியைப் பரப்பியதற்காக விமர்சகர்கள், பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

"நீங்கள் உண்மையாக தேடி அலைவது, உங்களைத் தேடி வந்தடையும் " என்று ஒரு பிரபலமான மேற்கோள் உள்ளது. மாநாடு திரைப்படத்தின், ஒட்டுமொத்த குழுவிற்கும் அனைவரிடமிருந்தும் அளவற்ற அன்பும் பாராட்டுக்களும், கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி” என்று உற்சாகமுடன் தெரிவித்துள்ளார்.