சினிமா

’இனி இதெல்லாம் கிடையாது’.. நடிகர், நடிகைகளுக்கு செக் வைத்த தெலுங்கு படத் தயாரிப்பாளர்கள்!

JustinDurai

நடிகர், நடிகைகளின் உதவியாளர்கள் செலவை நடிகர் நடிகைகளே கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை.

தெலுங்கு திரைப்பட நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தெலுங்கு படப்பிடிப்புகளை தயாரிப்பாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை சுமுகமான முடிவை எட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்புகள் தொடங்கும் என்ற நிலையில், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.

அதில், நடிகர், நடிகைகளின் உதவியாளர்கள் செலவை நடிகர் நடிகைகளே கொடுக்க வேண்டும். நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியாளர்கள் செலவை தயாரிப்பாளர் ஏற்க மாட்டார். அதேபோல் நடிகர், நடிகைகளுக்கு நாள் கணக்கு சம்பளம் என்ற முறையை கைவிட்டு, படத்துக்கு என சம்பளம் வழங்கப்படும்.

ஒரு படத்துக்கான கால்ஷீட் 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றப்படும். ஒரு படம் திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும். இந்த முடிவுகள் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.