தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புஷ்பா-2 திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்தார்.
அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா-2 திரைப்படம் நாடு முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கத்தில் நேற்றிரவு புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியாகியது. திரைப்படத்தை பார்ப்பதற்காக கட்டுங்கடங்காத கூட்டம் கூடியது.
ரசிகர்கள் அல்லு அர்ஜூனின் புகைப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு காரில் வந்த அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக, ஏராளமானோர் முண்டியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.
அப்போது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.