சினிமா

நடன இயக்குனர் சரியான பொய்யர்: தனுஸ்ரீ தத்தாவின் அடுத்த அட்டாக்!

நடன இயக்குனர் சரியான பொய்யர்: தனுஸ்ரீ தத்தாவின் அடுத்த அட்டாக்!

webteam

எனக்கு நடந்த பாலியல் தொல்லை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தவர் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா என்று நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் கூறியுள்ளார்.

ரஜினிகாந்துக்கு வில்லனாக, ’காலா’ படத்தில் நடித்தவர் நானா படேகர். பாலிவுட்டில் பிரபலமான நடிகரான இவர் மீது, பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். தனுஸ்ரீ, தமிழில் ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர். தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் அவர் பேசும்போது இந்த பாலியல் புகாரை அவர் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.

அவர் கூறும்போது, ‘2008-ஆம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, நானா படேகர் எனக்கு பாலியல் தொல்லை தந்தார். ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்த பாடலில் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த அவரை நான் கண்டித்த போது, ’எனக்கு பிடித்ததை செய்வேன், என்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது’ என்று சத்தமாகச் சொன்னார். நானா படேகரின் இந்த செயலுக்கு படக் குழுவினர் ஆதரவாக செயல்பட்டனர்.

இதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆதரவாளர்களின் மிரட்டலுக்கு ஆளானேன். என் குடும்பத்தாரோடு காரில் சென்ற போது அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டோம். ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் போன்ற பெரிய நடிகர்கள் இவ்வாறான நடிகருடன் நடிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அப்போது நான் புதுமுக நடிகை என்பதால், ஹீரோயின் ஒழுங்கா கோ-ஆபரேட் பண்ணலை’ என்று எனக்கு எதிராக செய்திகள் பரப்பப்பட்டன. நானா படேகரைப் போன்ற ஆட்கள் பெண்க ளின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது. என்னைப் போல தற்போது பல புதுமுகங்களும் இது போன்ற வலிகளை சுமந்து கொண்டுதான் இருக்கின்றனர் என கூறி இருந்தார்.

இதை அந்தப் படத்தில் பணியாற்றிய நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மறுத்திருந்தார். இவர், தமிழில் ஜீவாவின் ’ரவுத்திரம்’ படத்தில் நடித் திருந்தார். 

கணேஷ் ஆச்சார்யா கூறியது பற்றி தனுஸ்ரீ சொல்லும்போது, ‘கணேஷ் சரியான பொய்யர். அவர் இரண்டு முகம் கொண்ட மனிதர். பத்துவருடத் துக்கு முன் எனக்கு நடந்த அந்த பாலியல் தொல்லை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தவர் அவர். அதை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்’ என்று கூறியுள்ளார்.