இயக்குநர் மணிரத்னம்
இயக்குநர் மணிரத்னம் @ManiRatnam | Facebook
சினிமா

‘உலகம் போற்றும் படைப்புகளைத் தொடர்ந்து படைத்திட...’ இயக்குநர் மணிரத்னத்துக்கு முதல்வர் வாழ்த்து!

Prakash J

இந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமைகளில் இயக்குநர் மணிரத்னமும் ஒருவர். அவருக்கு இன்று 66 வது பிறந்தநாள். இதையடுத்து பலரும் அவருக்கு இன்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 'பகல் நிலவு' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மணிரத்னம், ’இதயகோயில்’ ’மெளன ராகம்’, ‘நாயகன்’, ’அக்னி நட்சத்திரம்’, ’கீதாஞ்சலி’, ’அஞ்சலி’, ’தளபதி’, ’ரோஜா’ ’பம்பாய்’ என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

இயக்குநர் மணிரத்னம்

எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் திரையுலகை சேர்ந்த பல ஜாம்பவான்கள், அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க முயற்சி செய்துவந்த நிலையில், அது கடந்த ஆண்டுதான், அதுவும் மணிரத்னத்தால் தான் சாத்தியப்பட்டது. தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 இந்த ஆண்டு ரிலீஸாகி, வசூல் ரீதியாகவும் அது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்திய சினிமாவின் அடையாளமாகத் திகழும் மணிரத்னத்துக்குப் பலரும் இன்று வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ”இந்தியாவின் தலைசிறந்த திரை இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் திரு. மணிரத்னம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் போற்றும் படைப்புகளைத் தொடர்ந்து படைத்திட வாழ்த்துகிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், ”தனது கலையின் மூலம் மில்லியன் கணக்கானோரின் இதயங்களைத் தொட்ட இந்திய சினிமாவின் ஒரு நாயகன். உரையாடல்களை அழகாகக் காட்சி அனுபவமாக மாற்றியவர். தொடர்ந்து கற்றுக் கொண்டு சவாலின் அளவைக் கவனிக்காமல், சினிமாவில் எல்லைகள் தொட்டுவிட்டீர்கள், அடுத்த தலைமுறை தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் ஒரு மாஸ்டர் நீங்கள்… நாயகன் முதல் KH23 ( கமல்- மணிரத்னம் இணையும் அடுத்த படம்) வரையிலான பயணம் எனக்கு தனிப்பட்ட வகையில், மதிப்பாகவும், வளமாகவும் இருந்தது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே’’ எனப் பதிவிட்டுள்ளார்.

இன்று இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து, இயக்குநர் மணிரத்னம் பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவர்கள் இருவரும் இணைந்து 10 படங்கள் பணியாற்றியுள்ளனர். அதில் இறுதியாக வெளிவந்த படம், தளபதி. இதை கேட்கையில் தளபதிக்குப்பின், ஏன் இவர்கள் ஒன்றாக பணியாற்றவில்லை என்ற கேள்வி பலருக்கும் எழும்... இதற்கு மணிரத்னமே ஒருமுறை விடையளித்துள்ளார். அந்த விடையை இந்த வீடியோவில் தெரிந்துக்கொள்ளுங்கள்!