Parvathy Kaataan
கோலிவுட் செய்திகள்

"என்னை வேறு ரூபத்தில் பார்ப்பீர்கள்!" - பார்வதி | Kaataan | Parvathi | Vijay Sethupathi

நான் மிகவும் மார்டனாக சென்றேன். ஆடை வடிவமைப்பாளரிடம் சென்று பேசிவிட்டு கதாபாத்திரமாக வாருங்கள் என்றார். அந்த ஊர் கெட்டப் போட்டு வந்ததும் இதுதான் உனக்கு பொருத்தமான லுக் என்றார்.

Johnson

மணிகண்டன், அஜித்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரிஷா, வடிவேல் முருகன், பார்வதி, சிங்கம்புலி, முத்துக்குமார் எனப் பலரும் நடித்துள்ள சீரிஸ் `முத்து என்கிற காட்டான்'. இந்த சீரிஸ் நாளை ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், நேற்று இரவு இதன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய பார்வதி, "இந்த நாளுக்காக பல வருடங்கள் காத்திருந்தேன். திடீரென மணிகண்டன், 'வெப் சீரிஸ்க்காக அழைக்கிறோம்' என ஒரு போன் கால் வந்தது. நான் காக்கா முட்டை மணிகண்டன் தானா என பலமுறை உறுதி செய்துகொண்டேன். ஏனென்றால் என்னால் நம்பவே முடியவில்லை. அப்போது தொகுப்பாளராக பயணித்துக் கொண்டிருந்தேன். சாருடன் ஒரு வீடியோ மீட்டிங் இருக்கிறது எனச் சொன்னார்கள். அதில் அவரைப் பார்த்த பிறகுதான் நான் இதனை நிஜம் எனவே நம்பினேன்.

அதன் பிறகு ஃபர்ஸ்ட் லுக்கிற்காக இயக்குநர் உசிலம்பட்டி அழைத்தார். நான் மிகவும் மார்டனாகச் சென்றேன். ’ஆடை வடிவமைப்பாளரிடம் சென்று பேசிவிட்டு, கதாபாத்திரமாக வாருங்கள்’ என்றார். அந்த ஊர் கெட்டப் போட்டு வந்ததும்தான், ’இவ்வளவு நாளாக நீ கண்ணாடி போட்டு ஊரை ஏமாற்றி இருக்கிறாய். இதுதான் உனக்குப் பொருத்தமான லுக்’ என்றார். எனக்கு என்னைப் பார்த்ததும், நிஜமாகவே நானா இது என்றிருந்தது. நான் மதுரைக்கார பெண்ணாக இருந்தாலுமே, மார்டன் உடைகளைத்தான் விரும்புவேன். ஆனால் எந்த மேக்கப்பும் போடாமல், மஞ்சள் தேய்த்து, ஜடை பின்னி செய்த அந்த லுக் மிகவும் பிடித்தது.

’நீ தொகுப்பாளராக இருந்ததால் உனக்கு கேமரா பயம் இல்லை, ஆனால் கேமரா எங்கே இருக்கிறது எனப் பார்த்துப் பார்த்து நடிக்காதே. காட்சிக்குள் இணைந்து நடி’ என்பார் மணிகண்டன். நிறைய விஷயங்கள் கற்றுத் தந்தார், அவருடன் பேசும்போது பல விஷயங்களைக் கற்கலாம். மிகச் சாதாரணமாக வாழ்க்கை தத்துவங்களைச் சொல்வார்.

Parvathy

பாருவை (பார்வதி) இதுவரை மக்களிடம் மற்றும் பிரபலங்களிடம் கேள்வி கேட்டு பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த வெப் சீரிஸ் மூலமாக நடிப்புக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது, கண்டிப்பாக வேறொரு ரூபத்தில் பார்ப்பீர்கள்" என்றார்.