`மேயாத மான்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். தொடர்ந்து அமலா பால் நடித்த `ஆடை', சந்தானம் நடித்த `குலு குலு' போன்ற படங்களை இயக்கினார். தற்போது விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ள '29' படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மே 8ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான பேட்டிகளை அளித்து வருகிறார்.
அந்தப் பேட்டியில் ரத்னகுமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருந்ததாகச் சொல்லப்பட்ட படம் குறித்து தகவலைப் பகிர்ந்தார். அதுபற்றி கூறுகையில், "லோகேஷ் எழுதிய கதையை லாரன்ஸ் மாஸ்டர் நடிப்பில் நான் இயக்குவதாக இருந்தது. லாரன்ஸ் மாஸ்டருக்கு அந்தக் கதை பிடித்திருந்தாலும், அதற்குள் ஒரு ஹாரர் எலமெண்ட் இருந்ததால், `லாரன்ஸ் என்றாலே ஹாரர் என்று சொல்கிறார்கள். அதிலிருந்து வெளியே வரத்தான் இப்படி கூட்டணி வைக்கிறேன். இங்கையும் ஹாரரா?' என்றார். எனவே வேறொரு கதையை லோகேஷ் போய்ச் சொன்னார்.
அதை டெவலப் பண்ணும் வேலைகள் நடக்கும்போது எனக்கு அந்தக் கதை மேல் பெரிய ஆர்வம் வரவில்லை. இது எனக்கானது இல்லை என்பதுபோல தோன்றியது. லோகேஷிடம் இதைச் சொன்னபோது `நீ ஒரு படம் பண்ண வேண்டும் என்றுதான் இதைச் செய்தேன். நீ உன்னடைய கதையை உருவாக்கு. உனக்கு என்ன பிடிக்கிறதோ, அதைச் செய்' என்று சொன்னார். பின்புதான் `29' துவங்கியது" என்றார்.