நடிகர் விமல் நடிப்பில் `வடம்' திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. அப்படத்தின் விளம்பரப்படுத்த வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று தியேட்டர்களில் ரசிகர்களுடன் படம் பார்த்து வருகிறது இந்தப் படக்குழு. அப்படி கோவையில் சென்று படம் பார்த்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் விமல். அதில் விஜயின் அரசியல் வருகை பற்றி பேசினார்.
விமல் பேசியபோது, "நான் விஜய் ரசிகர். `கில்லி' படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். அந்தச் சமயத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடம் அவருடன் பேசி பழக வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்பு, அவரைச் சந்திக்க வாய்ப்பு அமையவில்லை. ஆனால் அப்போது எப்படி இருந்தாரோ, இப்போதும் அப்படித்தான் இருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். அவரது அரசியல் பயணம் வெற்றியடையட்டும்.
அவருடன் இணைவேனா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். இப்போதைக்கு சினிமாவில் ஒரு நடிகராக, நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என இருக்கிறேன். அரசியலில் நல்லது செய்பவர்களுக்கு ஆதரவாக பயணிக்க வேண்டும். நல்ல விஷயங்களைச் செய்யும் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, மக்களுக்கு நல்லது செய்தால் சந்தோசம்தான். இவரும் நல்லது செய்வார் என தோன்றுகிறது. இதைத் தாண்டி எனக்கு அரசியல் பற்றிய அறிவு இல்லை. எனவே அரசியல் வேண்டாம், சினிமாவே போதும்" என்றார்.