தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். கடந்த சில வருடங்களாக சோலோ ஹீரோவாக அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத சூழலே நீடித்து வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வந்த `வீர தீர சூரன்' படத்துக்குப் பிறகு அடுத்து இந்தப் படம் என்பதில் குழப்பமே நீடித்து வந்தது. `மாவீரன்' படத்தை இயக்கிய மடோன் அஸ்வின், `96' பிரேம்குமார் ஆகியோர் படங்களில் நடிப்பதாக அவர் அறிவித்தாலும், அதன்பின் அப்படங்கள் அடுத்தகட்டத்தை எட்டாமலேயே இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், விக்ரம் நடிக்கும் 63வது படத்தை அறிமுக இயக்குநர் போடி K ராஜ்குமார்தான் இயக்கவுள்ளார். `மாவீரன்', `3BHK' படங்களை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அந்தப் படமும் என்ன நிலையில் இருக்கிறது என தெரியவில்லை.
இந்தச் சூழலில் விக்ரம் இன்ஸ்டாவில் அடுத்த படம் பற்றி பதிவிட்டுள்ளார். "சில நேரம் அமைதி, தயாரிப்புக்கான காலம். என்னை ஈர்க்கும் கதைகள் வருவதற்கு ஒரு வருடம் காத்திருந்தேன். நான் மிகவும் மதிக்கும் இயக்குநர்களுடன் இப்போது நான்கு படங்களை துவங்குகிறேன், ஒவ்வொன்றும் மாறுபட்டது" எனப் பதிவிட்டுள்ளார். எனவே சீயானின் அடுத்த நான்கு படங்களின் அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.