முதல்வர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ஜனநாயகன்' இன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா மற்றும் `பகவந்த் கேசரி' இயக்குநருமான அனில் ரவிப்புடியும் பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். அனில் இயக்கிய `பகவந்த் கேசரி' படத்தின் தழுவலாகத்தான் `ஜனநாயகன்' படம் உருவாகியுள்ளது. அவர் விஜயுடனான சந்திப்பு பற்றி இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில், " ‘வாரிசு’ பட ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது முதன் முறை நான் விஜயைச் சந்தித்தேன். அப்பட இயக்குநர் வம்சி எனக்கு அண்ணன் போன்றவர். அவர், என்னை விஜய் சாரிடம் அறிமுகப்படுத்தினார். ’வாரிசு’ படத்தில் போர்ட் ரூம் காட்சி ஒன்று வரும். அந்தக் காட்சிக்கு நான் வம்சியுடைய குழுவுடன் இணைந்து பணியாற்றினேன். அப்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதன்பிறகு மறுபடி ஹைதராபாத்தில் வெங்கட் பிரபு சாரின் 'GOAT' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு நாள் திடீரென ஜெகதீஷ் சாரின் குழுவிலிருந்து என்னை அழைத்தார்கள். 'நீங்கள் ஒருமுறை விஜய் சாரைப் பார்க்க வேண்டும்' என்று சொன்னார்கள். எனக்கு ஒரே ஆச்சர்யம்! 'திடீரென என்ன விஷயம்?' என்று யோசித்தபடியே, கையில் இருந்த வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு உடனடியாக அவரைப் பார்க்க ஓடினேன்.
அவரது வேனிட்டி வேனுக்குள் சென்று சுமார் 15 நிமிடங்கள் அவருடன் அமர்ந்து பேசினேன். அவர் என்னை எதற்காகக் கூப்பிட்டார் என்றால்... 'நான் பகவந்த் கேசரி திரைப்படத்தைப் பார்த்தேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தை அற்புதமாக எடுத்திருக்கிறீர்கள். குறிப்பாகச் சில காட்சிகளும் தருணங்களும் இன்னும் என்னைவிட்டு விலகாமல் மனதிலேயே நிற்கின்றன. அதற்காக உங்களைப் பாராட்டத்தான் கூப்பிட்டேன்' என்றார்.
அதைக் கேட்டதும் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி! அங்கிருந்து கிளம்பிய உடனே மகேஷ் பாபு சாருக்குத் தொடர்புகொண்டு, 'சார், இப்போதுதான் விஜய் சாரைச் சந்தித்தேன். என் படத்தைப் பார்த்துவிட்டு ரொம்பவே பாராட்டிப் பேசினார்' என்று அந்த மகிழ்ச்சியை அவரிடமும் பகிர்ந்துகொண்டேன்" என்றார்.