தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பூரி ஜெகன்நாத். இவர் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் `Slumdog: 33 Temple Road' என்ற தமிழ்p படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் பூரி ஜெகன்நாத் " ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் எனது முதல் நேரடி தமிழ் திரைப்படம். இந்த வாய்ப்பை அளித்த விஜய் சேதுபதி சாருக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஒரு இயக்குநராக, விஜய் சேதுபதி போன்ற திறமையான நடிகர் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் இணைந்தது எனக்கு மிகவும் பெருமையான விஷயம். படப்பிடிப்புத் தளத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ஒரு புதுமுக நடிகரைப்போலவே உற்சாகத்துடன் வருவார். இந்தப் படத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான, சக்திவாய்ந்த விஜய் சேதுபதியை காண்பார்கள்.
சம்யுக்தாவுடன் முதல்முறையாக பணியாற்றினேன். அவர் மிகவும் உற்சாகமானவர். இந்த படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் விடிவி கணேஷ் சார் எப்போதும் படப்பிடிப்புத் தளத்தை உற்சாகமாக வைத்திருப்பார். அவர் இருக்கும் இடத்தில் அனைவரின் முகத்திலும் சிரிப்பு இருக்கும். மிகவும் பாஸிட்டிவான மனிதர். கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான துனியா விஜய் இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய பங்களிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதேபோல், ஜரீனா வஹாப் அம்மாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில காட்சிகளில் அவருடைய நடிப்பைப் பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் வந்தது. பிரம்மாஜி, ரோஹன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு முழு அர்ப்பணிப்பு செய்துள்ளனர். இந்த படத்தின் நடிகர் தேர்வுக்கான பெருமை முழுவதும் சார்மி கௌருக்கே சேரும். இந்த படத்திற்காக மிகச் சிறந்த நடிகர் பட்டாளத்தை அவர் ஒருங்கிணைத்துள்ளார்.
‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தின் கதை இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பல பிச்சைக்காரர்களைக் கடந்து செல்கிறோம். ஆனால், அவர்களின் பின்னால் இருக்கும் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் கதைகளை நாம் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம். அந்த மனிதர்களின் உலகத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படம் உருவாகியுள்ளது.
இது ஒரு ஆக்ஷன் திரைப்படம் மட்டுமல்ல; வலுவான உணர்வுகளையும் கொண்ட திரைப்படம். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களுக்காக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் வந்து இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.