Visaranai Werner Herzog
கோலிவுட் செய்திகள்

"விசாரணை பார்த்து Werner Herzog சொன்னது..." வெற்றிமாறன் பகிர்ந்த சம்பவம்! Vetrimaaran | Visaranai

`அவர எதுக்கு இன்வைட் பண்ணீங்க, அவருக்கு படம் பிடிக்கலைன்னா எழுந்து போயிடுவாரு. அப்படி போயிட்டார்னா பிரச்னை ஆகிடும்' என சொன்னார்கள்.

Johnson

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அடுத்தாக சிம்பு நடிப்பில் `அரசன்' படத்தை துவங்கியுள்ளார். நேற்று வெளியான இப்படத்தின் புரோமோ டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் வெற்றிமாறன் கலந்து கொண்ட விருது விழாவில் தன் வாழ்வில் மறக்க முடியாத தருணம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த விருது விழாவில், உங்கள் வாழ்வில் ஃபேன் மொமண்ட் இருந்தால் அதை பகிருங்கள் எனக் கேட்டதும், வெற்றிமாறன் "எனக்கு ஃபேன் மொமண்ட் என்று எதுவும் இருந்ததில்லை. ஆனால் ஒரு உற்சாகமூட்டும் நிகழ்வு ஒன்று நடந்தது. Werner Herzog என்ற ஒரு ஜெர்மானிய இயக்குநர். அவருடைய Aguirre, the Wrath of God என்ற ஒரு படம் இருக்கிறது. அப்போது 1999, 2000 காலகட்டங்களில் ஃபிலிம் சேம்பரில், ஃபிலிம் சொசைட்டி மூலமாக படங்கள் திரையிடுவார்கள்.

Aguirre, the Wrath of God

அங்கு இந்த படத்தை (Aguirre, the Wrath of God) பார்த்து முடித்து நண்பர்களாக சேர்ந்து பேசினோம். இரவு 9 மணிக்கு படம் 11 மணிக்கு மேல் முடிந்தது. அப்போது பேசத் துவங்கிய நாங்கள் அடுத்த நாள் காலை 6 மணி வரை பேசிக் கொண்டே இருந்தோம். ஒரு டீக்கடையில் இருந்து இன்னொரு டீக்கடை என நகர்ந்து நகர்ந்து பேசிக் கொண்டே இருந்தோம். அப்படி எல்லா டீக்கடையும் சென்று சாலிகிராமம் செல்ல காலை 6 மணி ஆகிவிட்டது.

Werner Herzog

ஆஸ்கருக்கு `விசாரணை' சென்ற போது சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிரிவுக்கு ஓட்டளிக்கும் நபர்களில் ஒருவராக இருந்தது அதே Werner Herzog. அவர் படம் பார்ப்பதற்காக வந்திருந்தார். உடனே அங்கிருப்பவர்கள் எல்லோரும் `அவர எதுக்கு இன்வைட் பண்ணீங்க, அவருக்கு படம் பிடிக்கலைன்னா எழுந்து போயிடுவாரு. அப்படி போயிட்டார்னா பிரச்னை ஆகிடும்' என சொன்னார்கள். ஆனால் அவர் முழுப்படமும் பார்த்தார். பின்பு என்னிடம் வந்து 'இன்னைக்கு நைட் நான் தூங்க மாட்டேன், அதற்கு காரணம் உன்னுடைய படம். இந்த எடிட் வேறு மாதிரி இருந்திருக்கலாம் என யோசித்தேன். ஆனாலும் உன்னுடைய படம் உருவாக்கிய தாக்கம் எனக்குள் இருக்கிறது என்னால் இன்று இரவு தூங்க முடியாது' என்றார். அப்போது நான் 20 வருடங்களுக்கு முன்பு அவருடைய படத்தை பார்த்து இரவு முழுவதும் தூங்காமல் உரையாடியது பற்றி கூறினேன். அந்த நிகழ்வு என் வாழ்வில் சிறந்த தருணம்." என்றார்.