Venkat Prabhu Chennai 28
கோலிவுட் செய்திகள்

சில படங்கள் பாடங்கள்... சினிமாவில் 20 ஆண்டு பயணம் பற்றி VP பதிவு! | Venkat Prabhu | Chennai 28

பின்னோக்கிப் பார்க்கையில் என மனதிற்குள் நன்றியுணர்வு மட்டுமே நிரம்பி இருக்கிறது!

Johnson

இருபது ஆண்டுகளுக்கு முன் ‘சென்னை 28’ மூலம் இயக்குநராக பயணம் தொடங்கிய வெங்கட்பிரபு, எஸ்பிபி மற்றும் சரண் அளித்த வாய்ப்பே தனது வாழ்க்கையை மாற்றியதாக கூறுகிறார். ஒரே மாதிரி படங்களை மீண்டும் செய்யாமல், ஒவ்வொரு படத்தையும் புதிய கதை சொல்லும் பாணியில் உருவாக்க முயன்றதாகவும், சில படங்கள் உடனடி வரவேற்பும் சில படங்கள் காலப்போக்கில் அன்பும் பெற்றதாகவும், சில படங்கள் தன்னுக்கு பாடமாக அமைந்ததாகவும் அவர் பதிவில் நினைவுகூருகிறார்; தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடகங்கள், நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.

'சென்னை 28' மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெங்கட்பிரபு. தொடர்ச்சியாக `சரோஜா', `கோவா', `மங்காத்தா', `பிரியாணி', `மாநாடு' என விதவிதமான படங்களை கொடுத்தவர். சினிமாவில் இயக்குநராக 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். அவரின் முதல் படமான 'சென்னை 28' திரைப்படம் வெளியாகி, 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. சினிமாவில் 20-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது பற்றியும், இத்தனை ஆண்டுகளாக அவர் சினிமாவில் எதிர்கொண்ட அனுபவங்கள் பற்றியும் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவில் "இருபது ஆண்டுகளுக்கு முன்பு. இதே நாளில். 'சென்னை 600028 இல் ஒரு இயக்குநராக என் பயணம் தொடங்கியது. அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய எஸ்பிபி சார் அவர்களின் ஆசிகளாலும், சகோதரர் சரண் என் மீது வைத்த அசைக முடியாத நம்பிக்கையானும் மட்டுமே இது சாத்தியமானது. அந்த ஒரு வாய்ப்பு என் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது. இன்று (Aug 7). என் திரைப் பயணத்தின் 20-வது ஆண்டில் நுழையும் இந்த வேளையில், மறக்கமுடியாத நினைவுகளாலும் எதிர்காலம் குறித்த பேரார்வத்தாலும் என் மனம் நிரம்பி இருக்கிறது.

இந்தப் பயணத்தில் ஒருபோதும் செய்ததையே மீண்டும் செய்யக் கூடாது என்பதை நான் நோக்கமாகவே வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சினிமாவும் ஒரு புதிய வகை (GENRE). புதிய கதைசொல்லும் பாணி மற்றும் ஒரு புதிய சவாலை எதிர்கொள்வதற்கான வாய்ப்பாகவே எனக்கு அமைந்தது. சில முயற்சிகளுக்கு உடனடி அன்பும் வரவேற்பும் கிடைத்தன. சில படங்கள் காலப்போக்கில் ரசிக்கப்பட்டன: சில படங்கள் எனக்குப் பாடங்களைக் கற்றுக்கொடுத்தன. தொடர்ந்து புதிய முயற்சிகளை செய்வதற்கான தைரியம் எனக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு இத்தனை ஆண்டுகளாக நீங்கள் என் மீது காட்டி வரும் அளவற்ற அன்பும் நம்பிக்கையும்தான் காரணம் என் வெற்றிகளைக் கொண்டாடி இருக்கிறீர்கள்; கடினமான கட்டங்களில் என் பக்கபலமாக நின்று இருக்கிறீர்கள் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய படத்தோடு நான் வரும்போது அதே அன்போடு என்னை வரவேற்றிருக்கிறீர்கள்.

உங்களுடைய இந்த நம்பிக்கைதான் எனக்குத் தொடர்ந்து புதிய முயற்சிகளை எடுக்கும் துணிச்சலைக் கொடுக்கிறது. அதற்கு நான் எத்தனை முறை நன்றி சொன்னாலும் ஈடாகாது. பின்னோக்கிப் பார்க்கையில் என மனதிற்குள் நன்றியுணர்வு மட்டுமே நிரம்பி இருக்கிறது! என்னை நம்பிய ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும், நடிகர்களுக்கும். தொழில்நுட்பக கலைஞர்களுக்கும். ஊடக நண்பர்களுக்கும் என நண்பர்களுக்கும். இந்த பயணத்தின் அங்கமாக இருந்த ஒவ்வொருவருக்கும். அனைத்திற்கும் மேலாக சினிமாவைக் கொண்டாடும் இரசிகர்களுக்கும் என மனமார்ந்த நன்றிகள்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகும். இன்றும் நான் சினிமாவின் தீவிர ரசிகளாகவே உணர்கிறேன். ஒவ்வொரு சினிமாவும் எனக்குப் புதிதாக ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிற்கு முன்பும் எனக்குள் இருக்கும் அந்தப் படபடப்பும் எதிர்பார்ப்பும் இன்றும் மாறவில்லை. மக்களை மகிழ்விக்கும். வியப்பில் ஆழ்த்தும், மற்றும் அவர்களோடு ஒன்றிப்போகும் கதைகளைச் சொல்ல வேண்டும் என்ற என் கனவு மேலும் வலுவடைந்து மட்டுமே இருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அதே தீவிரமான ஆர்வத்தோடு உங்களுக்கு நல்ல கதைகளை வழங்குவேன் என்று உறுதியளிக்கிறேன். இன்னும் பல ஆண்டுகள் ஒன்றாக பயணிப்போம்!" என்றார்.