நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து ஜனவரி 14ம் தேதி வெளியான படம் `வா வாத்தியார்'. ராஜ்கிரண், க்ரித்தி ஷெட்டி, சத்யராஜ் எனப் பலரும் நடித்திருந்த இப்படம் எம் ஜி ஆர் பாத்திரத்தை ஒரு முக்கிய காரணியாக பயன்படுத்தி உருவாகி இருந்தது. போலீஸ்காரரான கார்த்தி பகலில் மோசமான போலீஸ் ஆகவும், இரவில் மக்களுக்கு நல்லது செய்யும் எம் ஜி ஆர் ஆகவும் மாறுவார். இதனால் அவருக்கு என்ன சிக்கல் வருகிறது, வில்லனை எப்படி எதிர்கொள்கிறார் என்பதாக கதை செல்லும்.
ஏற்கெனவே ஷங்கர் இயக்கிய `அந்நியன்' படத்தின் பாதிப்பு வா வாத்தியாரில் இருக்கிறது என்ற பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்தன. இப்போது `ஒருநாள்ல நாள் பாத்து சொல்றேன்' பட இயக்குநரும் , தயாரிப்பாளருமான ஆறுமுககுமார் `வா வாத்தியார்' படம் `துக்ளக் தர்பார்' போல இருக்கிறது என ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.
டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி விஜய் சேதுபதி நடித்த அப்படத்தில் அரசியல் லாபத்துக்காக எதையும் செய்யும் மோசமான விஜய் சேதுபதியை, அவருக்குள்ளே இருக்கும் நல்லவன் வெளியே வந்து அவரையே தடுப்பது என்பதாக கதை செல்லும்.
ஆறுமுககுமார் எழுதியுள்ள பதிவில் "வா வாத்தியார் படத்தில் `துக்ளக் தர்பார்' படத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதற்கு முறையான க்ரெடிட்டை அசல் படைப்பாளிகளுக்கு வழங்கி இருக்க வேண்டும். நாம் அனைவரும் நண்பர்களே என்றாலும், நேர்மை மிக முக்கியமான ஒன்று" எனப் பதிவிட்டுள்ளார். இப்பதிவு இப்போது பேசு பொருளாகி இருக்கிறது.