Vignesh Shivan Thuppakki, Podaa Podi
கோலிவுட் செய்திகள்

"விஜய் சார் என்னையும் சேர்த்து 13 பேர சுட்டார்" - விக்னேஷ் சிவன் சொன்ன ஃபிளாஷ்பேக் | Vignesh Shivan

'போடா போடி' பட வாய்ப்பு கிடைத்தபோது எனக்கு வயது 22. அந்தப் படத்தை துவங்கிய சமயத்தில் சிம்பு சாருக்கு VTV உட்பட சில படங்கள் கமிட் செய்திருந்தார். கடைசியில் அந்தப் படம் என்னுடைய 27ஆவது வயதில்தான் ரிலீஸ் ஆனது.

Johnson

’போடா போடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பிறகு `நானும் ரௌடிதான்' படம் இயக்கி பெரிய வரவேற்பைப் பெற்றவர், பிறகு `லவ் பண்ணா உட்றனும்', `காத்துவாக்குல ரெண்டு காதல்' போன்ற படங்களை இயக்கினார். தற்போது இவர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் `LIK' படத்தை இயக்கியுள்ளார். ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், அதுதொடர்பான பேட்டிகளை அளித்து வருகிறார்.

Podaa Podi

ஒரு பேட்டியில் அவர் சினிமாவுக்கு வந்த கதையைப் பகிர்ந்துள்ளார். அதில், "பிரபுசாலமன் சாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். ’போடா போடி’ பட வாய்ப்பு கிடைத்தபோது எனக்கு வயது 22. அந்தப் படத்தை துவங்கிய சமயத்தில் சிம்பு சாருக்கு VTV உட்பட சில படங்கள் கமிட் செய்திருந்தார். அவை துவங்கியதும் என்னுடைய படம் முடிக்க தாமதமாகிவிட்டது. சரி, 4 வருடம் பட்ட கஷ்டத்துக்கு இந்தப் படம் வெளியானதும் வாழ்க்கையே மாறிவிடும் என நினைத்தேன். என் அம்மாவையும் வேலையைவிட்டு நிற்கச் சொல்லி, ’இனி நான் பார்த்துக் கொள்கிறேன்’ எனச் சொன்னனேன். கடைசியில் அந்தப் படம் என்னுடைய 27ஆவது வயதில்தான் ரிலீஸ் ஆனது. வந்தாலும் வந்தது ’துப்பாக்கி’ என்ற படத்துடன் சேர்ந்து வந்தது. 

அந்தப் படத்தின் இடைவேளையின்போது விஜய் 12 பேரைச் சுடுவார். உண்மையில் அவர் சுட்டது 13 பேரை. நான்தான் அந்த 13ஆவது ஆள். அதோடு எனக்கு எல்லாம் முடிந்தது. படம் வெளியாகும் முன்பு வந்து கொண்டிருந்த சில போன் கால்கள்கூட, அதற்குப் பிறகு நின்றுபோனது. அதன்பின் என்ன செய்வது என்றே தெரியாத ஒரு நிலை. என்னிடம் இருந்த லேப்டாப்பில் டிசைனிங் பணிகள் செய்ய துவங்கினேன். அப்படி வந்ததுதான் 'வணக்கம் சென்னை' பட வாய்ப்பு.

Vignesh Shivan

அதன்மூலம் அனிருத் அறிமுகம் கிடைத்தது. அடுத்து, ’வை ராஜா வை’ பட வாய்ப்பு, அதன்மூலம் தனுஷ் சாரின் VIP பட வாய்ப்பு. அப்படத்தின் போஸ்டர் செய்ய போய், பின்னர் அதில் உதவி இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பு அமைந்தது. அந்தப் படம் ஹிட்டான பிறகுதான், தனுஷ் சார் என்னிடம், ’என்ன செய்யப் போகிறாய்’ எனக் கேட்டார். நான், நானும் ரௌடிதான் கதை சொன்னேன். அங்கிருந்துதான் என்னுடைய வாழ்க்கை துவங்கியது" என்றார்.