Ajith Saran
கோலிவுட் செய்திகள்

"ரசிகர் மன்றங்களை ஏன் கலைத்தார் அஜித்?" - சரண் சொன்ன காரணம் | Ajith | Saran

உச்ச நடிகராக வளர்ந்த சமயத்தில் 2011ஆம் ஆண்டு தன்னுடைய ரசிகர் மன்றங்களைக் கலைப்பதாக அறிவித்தார். ஆனாலும் இன்றுவரை அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் கொஞ்சமும் குறையவில்லை.

Johnson

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித். இவர் உச்ச நடிகராக வளர்ந்த சமயத்தில் 2011ஆம் ஆண்டு தன்னுடைய ரசிகர் மன்றங்களைக் கலைப்பதாக அறிவித்தார். ஆனாலும் இன்றுவரை அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் கொஞ்சமும் குறையவில்லை. நடிகர் அஜித் - ஷாலினி தம்பதியின் திருமண நாளை முன்னிட்டு அவர்கள் இணைந்து நடித்த `அமர்க்களம்' படம் ரீரிலீஸ் ஆகியுள்ளது. அப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் சரண் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ரசிகர்கள் குறித்து உங்களிடம் அஜித் ஏதாவது பகிர்ந்து கொள்வாரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்குப் பதில் சொன்ன சரண், "ரசிகர்களை மிகவும் மதிக்கக்கூடியவர் அஜித். உங்கள் அனைவருக்கும் தெரியும், அவர் தன் ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். அதற்கு மிக முக்கியமான காரணம் என்ன என்றால், தன் எல்லா ரசிகர்களுக்கு இடையில் மன்றம், பதவி என ஓர் அரசியல் நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார். அவர்களுக்குள் அவர்களே மோதிக் கொள்கிறார்கள். இதில், எனக்கு உடன்பாடில்லை. அவர்கள் நன்றாக இருக்க வேண்டும். எந்த சச்சரவும் இருக்கக் கூடாது என அந்த ஒரு காரணத்தைச் சொல்லித்தான் ரசிகர் மன்றங்களை கலைக்கும் முடிவை எடுத்தார். 

ரசிகர்கள் மீது எப்போதும் அவருக்கு மரியாதை உண்டு. நீங்கள் உங்கள் வேலையைச் சரியாகப் பாருங்கள். என்னுடைய படம் பிடித்தால் மட்டும் பாருங்கள் என்பதைத்தான் எப்போதும் அவர் சொல்வார்.

அஜித் குமார்

அவர் மிகவும் உண்மையாக இருக்கிறார். மற்றவர்களின் புகழுக்காகவோ, பாராட்டுக்காகவோ அவர் எப்போதும் பேசியது கிடையாது. அவர் மிகவும் எதார்த்தமான மனிதர். தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட வலிமையான சிற்பம்தான் அஜித் சார்" என்றார்.