`கருப்பு' படத்தை முடித்துவிட்டு `சூர்யா 46' படத்தில் நடித்துள்ளார் சூர்யா. தனுஷின் `வாத்தி', துல்கர் சல்மானின் `லக்கி பாஸ்கர்' போன்ற இரு ஹிட் படங்களை கொடுத்த வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கி வருகிறார் என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தில் மமிதா பைஜூ, ரவீணா டாண்டன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை பற்றி தயாரிப்பாளர் நாக வம்சி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் `சூர்யா 46' என்ன மாதிரியான களம் எனக் கேட்கப்பட்ட போது "கஜினி படத்தில் சஞ்சய் ராமசாமி கதாப்பாத்திரம் போல ஒரு பாத்திரம்தான் இந்தப் படத்தில் சூர்யா செய்கிறார். 45 வயதுடைய நபருக்கும் 20 வயதுள்ள பெண்ணுக்கும் இடையே நடக்கும் கலாட்டாக்கள், பிணைப்பு, உறவு, காதல் இவை எல்லாம் எப்படி இருக்கிறது, அவ்வளவு வயது வித்தியாசத்தில் காதல் இருக்கலாமா? கூடாதா? இதை எல்லாம் சொல்லும் படம்" என்றார்.
இப்படம் பற்றி இணையத்தில் உலவும் தகவல் என்ன என்றால், பிரிந்து சென்ற காதலியின் சாயலிலேயே ஒரு பெண்ணை ஹீரோ சந்திக்கிறார். அது அவரின் முன்னாள் காதலியின் மகள் என சொல்லப்படுகிறது. இப்படம் ஒரு காதல் கதை தான் என பல நாட்களாக தகவல் உலவி வந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரே அதை உறுதி செய்திருக்கிறார். மேலும் தொடர்ச்சியாக சீரியஸ் படங்களில் நடித்து வரும் சூர்யா, ஒரு காதல் கதையில் பெரிய இடைவேளைக்கு பிறகு நடிக்கிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
`கருப்பு' படத்தின் ரிலீஸ் வேலைகள் ஒருபுறம் நடந்து வர, `சூர்யா 46' படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டது. இதனையடுத்து ஜித்து மாதவன் இயக்கிவரும் `சூர்யா 47' படப்பிடிப்பில் இருக்கிறார் சூர்யா. இப்படம் ஒரு போலீஸ் கதையாக உருவாகி வருகிறது.