சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், இயக்குநர் தமிழ் கதையில் விக்ரம் பிரபு, அக்ஷய்குமார், அனீஷ்மா, ஆனந்தா நடித்த படம் `சிறை'. இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இப்படத்தின் 75வது நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிமாறன் பேசிய போது "தியேட்டரில் ஒரு பெரிய ஸ்டார் படம் அல்லாத, கதையை மட்டுமே நம்பிய ஒரு படம் நம்பி தயாரித்த தயாரிப்பாளருக்கு தான் முதல் நன்றி சொல்ல வேண்டும். அதில் அவர் பையன் நடித்திருக்கிறார் என்பதை தாண்டி இதை நம்ப ஒரு தைரியம் வேண்டும். அவருடைய நம்பிக்கை தான் இந்தப் படத்தின் வெற்றி.
நான் படத்தை பார்த்து வெளியே வந்த பிறகு நீங்கள் முதலீடு செய்த பணம் வந்துவிடும் சார் என ஒரு தொகையை சொன்னேன். அவர் அதைவிட மூன்று மடங்கு செய்யும் என சொன்னார். சரி ஒரு தயாரிப்பாளருக்கான நம்பிக்கை என விட்டுவிட்டேன். ஆனால் அவருடைய நம்பிக்கை தான் சரியாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அவர் சொன்னதையும் தாண்டி இந்தப்படம் கொடுத்துள்ளது. இந்தப் படத்திலிருக்கும் உண்மை, அது கடத்த நினைக்கும் உணர்வு எல்லோருக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என நினைக்கிறேன். இது தமிழின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். அதை சுரேஷ் ஒரு ஸ்க்ரிப்ட்டாக மாற்றி தன்னுடையதாக மாற்றும் பிராசஸ் ஊடே நிறைய சவால்கள் இருந்திருக்கும். அதை அவர் எதிர்கொண்டு படத்தை வெற்றியாக கொடுத்திருக்கிறார். இதில் தமிழ் எந்த இடத்திலும் தனக்கான அங்கீகாரத்தை கேட்காதது ஆச்சரியத்துக்கு உரியது. ஒன்று வெற்றி அடைந்தால், இது என்னடையது என குறிப்பிடும் வழக்கம் இருக்கும். அதை எங்குமே தமிழ் கோரவில்லை. அதே சமயம் சுரேஷ் எந்த இடத்திலும் தமிழை விட்டுக் கொடுக்கவில்லை. அது அவர்களிடம் உள்ள சிறப்பு.
எல்லாவற்றையும் தாண்டி இந்தப் படத்தை தமிழ் ரசிகர்கள் பார்த்த விதம் மிக சிறப்பானது. நான் எப்போதுமே சொல்வது போல தமிழ் சினிமா மெய்ன்ஸ்ட்ரீம் பார்வையாளர்கள் தான், the most evolved என சொல்வேன். இந்த மாதிரி படத்தை வேறு மொழியில் எடுத்திருந்தால் வெற்றிப்படமாக மாறியிருக்குமா என தெரியவில்லை. அதை தமிழில் மட்டும் தான் தொடர்ந்து செய்கிறார்கள். அப்படி சுரேஷை கடந்த வருடத்தின் முக்கிய இயக்குநராக மாற்றிய தமிழ் பார்வையாளர்களுக்கு நாம் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும்." என்றார்.