Pa Ranjith CBFC
கோலிவுட் செய்திகள்

" 'மெட்ராஸ்' படத்துக்கு A+ தருகிறோம் என்றார்கள்" - சென்சார் குறித்து பா இரஞ்சித் | Pa Ranjith | CBFC

நீங்கள் ரவுடிகளை பற்றியும், ரவுடியிசத்தை பற்றியும் படம் செய்திருக்கிறீர்கள். இதை ரவுடிகளுக்கு மட்டும் காட்டுங்கள், பொதுமக்கள் இதை பார்க்க விரும்ப மாட்டார்கள் என்றார்கள்.

Johnson

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படக்கூடிய இயக்குநர்களில் ஒருவர் பா இரஞ்சித். இவர் சமீபத்தில் கேரளாவில் நடந்த இலக்கிய திருவிழாவில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக Caste, Camera, Ambedkar என்ற உரையாடலில் கலந்துகொண்டவர். பல கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

Madras

அதில் சினிமாவுக்கும் தணிக்கை வாரியத்துக்கும் இடையிலான பிரச்சனைகள் குறித்து கேட்கப்பட்ட போது, "என்னுடைய முதல் படத்திலிருந்து சென்சார் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறேன். ’மெட்ராஸ்’ படத்தை மிக மோசமாக விமர்சித்தது சென்சார்தான். நீங்கள் ரவுடிகளைப் பற்றியும், ரவுடியிசத்தைப் பற்றியும் படம் செய்திருக்கிறீர்கள். இதை ரவுடிகளுக்கு மட்டும் காட்டுங்கள், பொதுமக்கள் இதைப் பார்க்க விரும்பமாட்டார்கள். எனவே, ’நாங்கள் A+ தருகிறோம்’ என்றார்கள்.  இதற்கான ஒரு தீர்வாக, சென்சாரில் உள்ள ஐந்து நபர்களில் ஒருவர் தலித் நபராக இருக்க வேண்டும் எனச் சொன்னேன். ஏனென்றால், நான் சென்றாலே எரிச்சலாக பார்ப்பார்கள். எங்களின் கலாசாரம் அவர்களுக்குப் புரிவதில்லை, எங்கள் மொழி புரிவதில்லை. அதுதான் இங்கு பிரச்னை.

இப்போது பிரசார படங்களும், அதற்கு எதிரான படங்களும் வருகிறது. இப்போதுதான் இந்தப் பிரச்னை பலருக்கும் வர துவங்கி இருக்கிறது. இப்போது வாருங்கள், நாம் ஒன்றாக சேர்ந்து போராடுவோம். ஜனநாயகனுக்கு இதே பிரச்னை வந்திருக்கிறது, ’பராசக்தி’ படத்துக்கு ம்யூட் கொடுக்கப்பட்டுள்ளது. இது இப்போதுதான் என இல்லை. இந்திய சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்து இந்தப் பிரச்னை இருந்திருக்கிறது.

இப்போதுதான் அனைவரும் அதனை உணர துவங்கியிருக்கிறார்கள். இப்போது அது எல்லோருக்குமான பிரச்னையாக மாறியுள்ளது. ஆளும் அரசுக்கு எதிராக நாம் எதுவும் பேச முடியாது என வரும்போதுதான் இதன் தீவிரத்தன்மையை புரிந்துகொள்கிறார்கள். இதனை ஒரு தேசிய இயக்கமாக முன்னடுத்தால்தான் தீர்வு பிறக்கும்" என்றார் பா இரஞ்சித்.