பரத், சாய் கார்த்தி நடிப்பில் ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ள படம் `காளிதாஸ் 2'. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீடு நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகர் பரத், "2019இல் இந்தப் பட வரிசை ஆரம்பித்தது. என்னுடைய கேரியர்ல நிறைய படங்கள் செய்திருக்கிறேன். அதில் புதுமுக இயக்குநர்களோடு நான் வேலை பார்த்திருக்கேன். அப்படிப்பட்ட என்னுடைய சினிமா பயணத்தில்தான் எனக்கும் செந்தில் சாருக்குமான இந்தப் பயணம் ஆரம்பித்தது. 2019இல் `காளிதாஸ்' வந்து பெரிய வெற்றியடைந்தது. அதன்பிறகு நானே அவரிடம் ரெண்டு மூன்று முறை, ’வாங்க.. அடுத்த படம் செய்யலாம்’ எனக் கேட்டிருக்கிறேன். கோவிட்டில் இரண்டு வருடம் போய்விட்டது. அதன் பின்னும் எங்கள் நட்பு தொடர்ந்தது.
ஆனால் எங்கள் இருவருக்குமான பயணங்கள் வெவ்வேறாக இருந்த காரணத்தால், அந்த வேலைகளில் இருந்தோம். ஆனாலும் எனக்கு இவருடன் பணியாற்ற வேண்டும் என தோனிக்கொண்டே இருந்தது. நான் எத்தனையோ புது இயக்குநர்களுடன் பணியாற்றி இருந்தாலும், இவர் மிக சிறப்பானவர். சினிமாவில் நான் எடுத்துக் கொண்ட டேக் அவே என்ன என்றால், ஒரு நல்ல இயக்குநர் கிடைத்தால் உங்க ஜர்னி தானாக திறந்திடும். நல்ல டைரக்டர் கிடைக்கவில்லை என்றால்தான் பஞ்சாயத்து. எனக்கு அப்படி அமைந்த இயக்குநர்தான் ஸ்ரீ செந்தில். சினிமாவில் எல்லா ஹீரோஸுக்கும் வெற்றி, தோல்வி இருக்கும். மூணு வெற்றி படம் கொடுத்ததுக்குப் பிறகு தலையில தூக்கி வச்சு கொண்டாடுவாங்க. திடீர் என தோல்விப் படம் கொடுத்திட்டால், அதைச் சார்ந்துதான் மார்க்கெட் இருக்கும். அப்போ அவருக்கு மார்க்கெட் இல்லை எனச் சொல்வார்கள். அப்படி ஏற்றத்தாழ்வுகள் நிறைய இருந்த சூழலில் இருந்தபோது எனக்கு கிடைத்த படம்தான் 'காளிதாஸ்'. அது எனக்கு கம்பேக் படமாக அமைந்தது.
நான் சினிமாவை விட்டு எங்கேயும் போகவில்லை. இதே சினிமாவில் இருக்கணும் என்றுதான் 23 வருடமாக அடித்து, புடித்து வந்து இருக்கிறேன். ஆனால் வியாபாரம் என்று வரும் போது உங்களுடைய கடைசிப் படத்தை வைத்துதான் இங்கே பிசினஸ் இருக்கும். காளிதாஸ் 2 படத்தைச் சின்னதாகத் தொடங்கினோம். ஆனால், இது பெரிய படமாக வந்திருக்கிறது. அதற்கு மிக முக்கியமான காரணம் தயாரிப்பாளர்கள்.
மேலும் ஆடியோ லாஞ்ச் என்பதை எல்லாம் ரீல்ஸில்தான் நிறைய பார்த்திருக்கிறேன். நான் நிறைய படங்கள் செய்தாலும் நிறைய படங்களுக்கு ஆடியோ லான்ச் செய்ய மாட்டார்கள். இதை சிம்பதிக்காக சொல்லவில்லை, இதுதான் ரியாலிட்டி. ஒரு கட்டத்தில் நானும் அதனைப் புரிந்துகொண்டேன். நமக்கு ஒரு நல்ல தயாரிப்பாளர் அமைந்தால்தான் இதெல்லாம் கிடைக்கும் என நினைத்தேன். இப்போது அமைந்திருக்கிறது. இந்தக் கதை தேவைக்கும் அதிகமாக கொடுத்து பிரம்மாண்டமாக்கி இருக்கிறார்கள்" என்றார்.