சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள படம் ’விஸ்வநாத் & சன்ஸ்’. இதில் மமிதா பைஜூ, ராதிகா, ரவீணா டாண்டன், சுனில், காளி வெங்கட் எனப் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. தற்போது இந்தப் படத்தின் கதை என்ன என்பது குறித்த பேச்சுக்கள் எழுந்துள்ளன.
நாற்பது வயதைக் கடந்தும் தனது கனவுகளைத் துரத்தும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். அவரின் தாயாக ராதிகா நடித்துள்ளார். சிங்கிள் ஃபாதரான சஞ்சய் தன் குழந்தையை வளர்ப்பது போலவும், அந்தக் குழந்தைக்கு வரும் பாதிப்பை சரிசெய்ய வரும் நபராக மமிதா வருவதுபோலவும் ட்ரெய்லரில் காட்டப்பட்டிருந்தது. குழந்தைக்காக வரும் மமிதா மெல்ல மெல்ல சூர்யா மீது காதல் கொள்கிறார் அதன்பின் என்ன என்பதே கதையாக இருக்கும் என ட்ரெய்லர் சொல்லுகிறது.
கோயம்புத்தூரில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் படத்தின் உணர்வுபூர்வமான ஆழம் மற்றும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் திறன் குறித்தும் படக் குழுவினர் மிகுந்த நம்பிக்கையைப் பேச்சில் வெளிப்படுத்தினர்.
சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் - ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இந்த ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் வார இறுதியில் மறக்க இயலாத உணர்ச்சிகளின் உலகத்தை இப்படம் பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளது.