இந்தியா முழுவதும் பிரபலமான பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாரம்பரியத்தை கௌரவிக்க, கேரளா பாலக்காடு யக்காராவில் SAMAM அமைப்பு சார்பில் 10 அடி உயர சிலை திறந்து வைக்கப்பட்டது. யேசுதாஸ் தலைமையில், அவரது மகன் விஜய் யேசுதாஸ் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில், எம்.எம். கீரவாணி மற்றும் எஸ்.பி. சரண் சிலையை திறந்தனர். வீடியோ மூலம் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
இந்தியா முழுக்க பிரபலமான பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அவர் மறைந்தாலும் காலத்தால் அழியாத பல பாடல்கள் அவர் குரலில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அவரின் பாரம்பரியத்தை கொண்டாடுவதற்காக, முன்னணி தென்னிந்தியப் பாடகர்கள் ஒன்று கூடி பாலக்காடு யக்காராவில் உள்ள வி.டி.பட்டத்திரிப்பாடு கலாச்சார வளாகத்தில் SAMAM (Singers Association of Malayalam Movies) சார்பாக எஸ் பி பியின் 10 அடி சிலை திறக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தலைவரான யேசுதாஸ் இந்த சிலை திறக்கும் பணிகளில் முக்கிய பங்காற்ற, அவரது மகன் விஜய் யேசுதாஸ் இந்நிகழ்வை ஒருங்கிணைத்திருக்கிறார். இந்த சிலையை ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி மற்றும் எஸ்.பி. சரண் ஆகியோர் மார்ச் 31ம் தேதி திறந்து வைத்தனர்.
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு எஸ் பி பியை நினைவுகூர்ந்த கமல்ஹாசன் “இந்த நிகழ்வைக் கண்டு நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். நன்றி, பாலக்காடு; நன்றி, யேசு ஏட்டா. பெரிய மனிதர்களால் மட்டுமே சிறந்த கலைஞர்களாக இருக்க முடியும் என்பதை இது காட்டுகிறது. நீங்கள் இதைச் செய்வதே நீங்கள் எவ்வளவு சிறந்தவர் என்பதற்குச் சான்றாகும். இது ஒரு அற்புதமான தருணம்; நான் இதைப் பாராட்டுகிறேன்.
சேட்டா, எஸ்.பி.பி. மீது நான் எவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் திறமையின் மீதும், என் மீது நீங்கள் காட்டும் அன்பின் மீதும் நான் எவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறேன் என்பதும் உங்களுக்குத் தெரியும். இது உங்கள் அன்புக்கு மற்றுமொரு உதாரணம், சேட்டா. அண்ணாயா சார்பாக நன்றி; நான் எப்போதும் எஸ்.பி.பி. அவர்களை 'அண்ணாயா' என்று அழைப்பேன், அவர் என்னை 'தம்முடு' என்று அழைப்பார்.” எனப் பேசினார்.
அதேபோல ரஜினியும் வீடியோ வெளியிட்டு எஸ்பிபி உடனான நினைவுகளை பகிர்ந்துள்ளார்.