Sharath Youth
கோலிவுட் செய்திகள்

ஆபீஸ்பாய் நானு, SKதான் என்னை நடிகனாக்கினார்! - நெகிழும் `யூத் பப்லு' சரத் | Youth | Sharath

சிவா அண்ணன் என்னைக் காட்டி சிபி சாரிடம் `இவன் அந்த ரோலுக்கு சரியா இருப்பான்ல' எனக் கேட்டார். அவரும், 'சரியாக இருப்பேன்' எனக் கூறினார். அப்போ ஆடிஷன் செய்து ஆரம்பித்துவிடலாம் என சொன்னார்கள.

Johnson

கென் கருணாஸ் இயக்குநராகவும், ஹீரோவாகவும் அறிமுகமான படம் `யூத்', இப்போது திரையரங்கில் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் பப்லு என்கிற கதாபாத்திரத்தில் கென்னுடைய பள்ளிth தோழனாக நடித்திருந்தவர்தான் சரத். படத்தில் இவர் வரும் காட்சிகளுக்கும் அப்ளாஸ் தெறிக்கிறது. இவர் இதற்கு முன் 'டான்', 'லப்பர் பந்து' உள்ளிட்ட சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இன்று 'யூத்' உச்சத்துக்கு ஏற்றி விட்டிருக்கிறது.

Youth

இப்படம் கொடுத்த கவனத்தினால் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், தன் பயணத்தைப் பற்றி கூறியுள்ளார். அந்தப் பேட்டியில், "நான் டூவீலர் மெக்கானிக்காக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கே சம்பளம் போதவில்லை, நான் வேலையை விடும்போது எனக்கு ஒருநாள் சம்பளம் 350 ரூபாய்தான். குடும்பச் சூழலும் சரியாக இல்லை. என் மாமா 24AM ஸ்டுடியோவில் டிரைவராக இருந்தார். அவர்தான் SK புரொடக்ஷனில் வேலை இருக்கிறது எனக் கூறினார். `டாக்டர்' படத்துக்கான ஆபீஸில் நான் இங்கு ஆபீஸ் பாயாக பணியாற்ற தொடங்கினேன். அங்கு பரணி, கௌதம் என்ற இருவர் இருந்தார்கள். அவர்கள் என்னை நோட் செய்து என்னைப் பற்றி சிவா அண்ணனிடம் நான் செய்வதுபோலே இமிடேட் செய்து காட்டி இருக்கிறார்கள். அப்படித்தான் அவர் என்னைக் கவனிக்க ஆரம்பித்தார். பொங்கல் சமயத்தில் SK புரொடக்ஷனில் ஆள் இல்லை. எனவே நான் அங்கு போனேன். அங்கே `டான்' படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது சிவா அண்ணன் என்னைக் காட்டி சிபி சாரிடம், `இவன் அந்த ரோலுக்கு சரியா இருப்பான்ல' எனக் கேட்டார். அவரும், ’சரியாக இருப்பேன்’ எனக் கூறினார். அப்போ ஆடிஷன் செய்து ஆரம்பித்துவிடலாம் எனச் சொன்னார்கள். நான் விளையாட்டுக்குச் சொல்கிறார்கள் என நினைத்தேன். பின்பு ஒருநாள் சிவா அண்ணன் என்னைப் பார்த்த போது, `உன்ன ஆடிஷன் பண்ண சொன்னேனே பண்ணியா?' என்றார், `இல்லண்ணே' என்றேன். `ஓ அப்போ ஆடிஷன் பண்ணாம நேரா ஷூட் வந்திரலாம்னு இருக்கியா' என்றார். உடனடியாக போய் நைட் 2 மணிக்கு போய் ஆடிஷன் கொடுத்தேன். அப்படிதான் ’டான்’ படத்தில் நடித்தேன்.

அதற்கு முன்பு வரை நடிக்க வேண்டும் என்ற ஆசையே இருந்ததில்லை. அதுவரை யாராவது சினிமா பிரபலத்துக்கு டிரைவர் ஆகலாம் என்ற திட்டம்தான் எனக்கு இருந்தது. ஆனால் ’டான்’ படத்துக்கு பிறகு எனக்கு ஆசை வந்தது. ’டான்’ படத்துக்கு பிறகு வேலையைவிட்டு நின்றாலும், இன்னுமும் SK புரொடக்ஷன் அலுவலகத்தில்தான் இருக்கிறேன். காரணம், சிவா அண்ணன்தான். ’நீ வெளியே போய் தங்கினால் வீடு, சாப்பாடு என செலவாகும். நீ இங்கேயே தங்கு, சாப்பாடும் இருக்கிறது. இங்கு தங்கிக் கொண்டே வாய்ப்பு தேடு’ என சொன்னார். 'கனா' படத்தில் தமிழரசன் பச்சமுத்து அண்ணா உதவி இயக்குநராக வேலை பார்த்திருந்தார். அந்த தொடர்பு மூலமாக அவர் என்னைப் பற்றி கேள்விப்பட்டு 'லப்பர் பந்து' படத்தில் என்னை நடிக்க வைத்தார். அந்தப் படத்தில் என்னைப் பார்த்த கருணாஸ் சார், கென்னிடம், ’உன் கதைக்குத் தகுந்த ஒரு பையன் படத்தில் நடித்திருக்கிறான். நீ பார்த்து முடிவு செய்துகொள்’ எனக் கூறி இருக்கிறார். பின்னர் படம் பார்த்து கென் எனக்கு போன் செய்து `யூத்' பட வாய்ப்பை கொடுத்தார். 

Sharath

’எல்லோரும் இன்னும் நீ தெளிவா பேசு’ எனச் சொல்வார்கள். ’என் குரல்தான் என் மைனஸ்’ என்பார்கள். ஆனால், ’அந்த குரலுக்காகத்தான் என்னை தேர்வு செய்தேன்’ என சொன்னார் கென். இப்படத்துக்கு வரும் வரவேற்பு பார்த்து என் வீட்டிலும் இப்போது எல்லோரும் ஹேப்பி. சிவா அண்ணன் இல்லைனா நான் சினிமால இல்ல, கென் இல்லன்னா எனக்கு இந்த வரவேற்பு இல்ல. `யூத்' படத்துக்கு எஸ்.கே. அண்ணன் வாழ்த்துச் சொல்லி, 'இனிமேல் உனக்கு நல்ல கேரக்டர்ஸ் வரும்' என சொன்னார்." என்று கூறியிருக்கிறார் சரத்.