கமல்ஹாசனின் RKFI தயாரித்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகும் படம் `சேயோன்'. இதன் ஃபர்ஸ்ட் லுக் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான `பராசக்தி' படத்திற்குப் பிறகு, சிவா நடிக்கும் படத்தை யார் இயக்கப் போவது என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், `தாய்கிழவி' என்ற மெகா ஹிட் பட இயக்குநர் சிவக்குமார் முருகேசன் சிவா படத்தை இயக்குகிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
அறிவிப்பு வெளியாகி மூன்று மாதங்களுக்கு மேல் ஆனாலும் படப்பிடிப்பு செல்லாமல் இருந்தது படக்குழு. படப்பிடிப்பு தளங்களுக்காக அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. தற்போது இன்று முதல் படப்பிடிப்பு துவங்குகிறது என அறிவித்துள்ளனர். மதுரையின் உசிலம்பட்டி, செக்கானூரணி, கருமாத்தூர் சார்ந்த பகுதியைப் படத்தின் களமாகக் கொண்டும், படத்தில் சாமியாடி பாத்திரத்தில் சிவா நடித்திருப்பதுபோல இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டது. தற்போது படப்பிடிப்பும் அங்குதான் துவங்க உள்ளது.
இதற்காக இன்று மதுரை சென்றுள்ள சிவகார்த்திகேயன் அங்குள்ள செய்தியாளர்களிடம் பேசியபோது, " ‘சேயோன்’ இன்று துவங்குகிறது. ஒரு சிறப்பான படமாக இருக்கும், அதற்கான உழைப்பைக் கொடுக்க மொத்த குழுவும் தயாராக இருக்கிறோம். நம்ம ஊர் பக்கம் வந்து, நம்ம ஊர் படம் செய்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. அதை `தாய் கிழவி' இயக்குநருடன் செய்வது கூடுதல் சிறப்பு. மதுரைக்கு என ஒரு பவர் இருக்கிறது. அந்த பவர் குறையாமல் இந்தப் படம் இருக்கும்' என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள், “ ‘விருமாண்டி’போல இருக்குமா” எனக் கேட்டதும், "அந்த மாதிரி எடுக்க நினைக்கவில்லை. ஆனால், அதில் எப்படி எல்லோருக்கும் பிடிக்கும்படியாக ஒன்று இருந்ததோ, அது மாதிரி எடுக்க முயற்சி செய்வோம்" என்றார். இறுதியாக, ”முதல்வரின் ஆட்சி எப்படி இருக்கிறது” என்றதும், "எங்களுடைய துறையிலிருந்து ஒரு முதல்வர் என்பது மிகவும் மகிழ்ச்சி. விஜய் சார் வென்ற உடன் போன் செய்து பேசினேன். எப்போதும்போல அமைதியாக பேசினார், வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார். அவர் எதை எடுத்தாலும் சிறப்பாகச் செய்வார், இதுவும் அப்படியே இருக்கும் என நம்புவோம்" என பதிலளித்தார்.
இப்படம் அக்டோபர் வெளியீடு என புரோமோ வெளியானபோதே அறிவித்தனர். ஆனால், படப்பிடிப்பு துவங்க கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டதால் ரிலீசும் தள்ளிப்போகலாம் எனச் சொல்லப்படுகிறது.