வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் படம் 'அரசன்'. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டிசம்பர் மாதம் கோவில்பட்டியில் துவங்கியது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது. ஆனால் சில வாரங்களுக்கு முன்பு சிம்பு - ஐசரி கணேஷ் இடையேயான பணப் பிரச்னை காரணமாக இப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் பிரச்னை சுமுகமாகிவிட்டதாகச் சொல்லப்பட்டது.
இந்த பிரச்னை சுமுகமாகப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டது எனச் சொல்லப்பட்டாலும், `அரசன்' படப்பிடிப்பு மீண்டும் துவங்காமலே இருந்தது. எனவே ’அரசன்’ படத்துக்கு போடப்பட்ட செட்டில் `ராஜன் வகையறா' படப்பிடிப்பை வெற்றிமாறன் துவங்கிவிட்டார் எனச் சொல்லப்பட்டது. இந்நிலையில் `அரசன்' படப்பிடிப்பு மீண்டும் துவங்கிவிட்டது என புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்துள்ளனர்.
இப்போது அதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். `வடசென்னை' உலகில் நடக்கும் கதையாக உருவாகிறது. சமீபத்தில் ஒரு விருது விழா ஒன்றில் பேசிய யோகிபாபு, `அரசன்' படத்தில் அவரும் நடிப்பதை உறுதி செய்துள்ளார். கூடவே, படம் முழுக்க சிம்புவுடன் வரக்கூடிய பாத்திரம் எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.