தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவர் ராஜமௌலி இயக்கத்தில் நடித்த, `பாகுபலி' படத்திற்குப் பிறகு உலக அளவில் மிகப்பெரிய பிரபலமானார். அப்படத்தில் நடிப்பதற்கான காரணத்தை சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அந்தப் பேட்டியில் சத்யராஜ் பேசிய போது, "ராஜமௌலி எனக்கு `பாகுபலி' கதை சொல்ல வந்தபோது மிக நேர்மையாக நடந்துகொண்டார். அப்போது அவர் எடுத்த படங்கள் எல்லாம் மிகப் பெரிய ஹிட். அத்தனை பெரிய இயக்குநர் இந்தக் கதையைச் சொல்ல சென்னையில் என் வீட்டுக்கு வந்தார். இருவரும் அமர்ந்திருந்தோம், கொஞ்சம் அவர் அமைதியாக எதையோ சொல்லத் தயங்கினார்.
`ஒரு ஷாட்ல நீங்க பிரபாஸ் காலை எடுத்து உங்கள் தலையில் வைக்க வேண்டும். அது உங்களுக்குச் சம்மதமா ' என்றார். நான் எதற்கு அவர் காலை எடுத்து தலையில் வைக்க வேண்டும் என்ற தயக்கம் எனக்கு இருந்தது. ஆனாலும் கதை சொல்லுங்கள், அது ஏற்றுக் கொள்ளும்படி இருந்தால் எனக்கு சம்மதம் என்றேன். அவர் `என்ன ஆனாலும் செய்ய மாட்டேன் என்றால், நான் சொல்ல முடியாது' என்று கூறினார். உடனே `திருமால் பெருமை' படத்தில் சிவாஜி அப்பாவின் காட்சியை உதாரணமாக கூறினேன்.
அதில் சிவாஜி சார் ஒரு திமிர்பிடித்த ராஜா, சிவகுமார் சார் திருமாலின் அவதாரம். அதில் சிவகுமார் சார் காலில் இருக்கும் மெட்டியை கழற்றும் ஒரு காட்சி இருக்கும். சிவாஜி எவ்வளவு முயன்றும் அதை கழற்ற முடியாது. கடைசியில் அந்த விரலை தன் வாயில் வைத்து மெட்டியை கழற்ற முயல்வார் சிவாஜி. எங்களுக்கு நடிப்பு என்றால் சிவாஜி சார்தான். அவரே புதிதாக நடிக்க வந்த சிவகுமார் அண்ணனின் விரலை வாயில் வைத்திருக்கிறார்.
எனவே எனக்கு திருப்தியாக இருந்தால் நான் நடிக்கிறேன் எனக் கூறினேன். ராஜமௌலி பின்னர் முழுக் கதையும் கூறினார். அவர் கூறிய கதையில் அந்தக் காட்சி எனக்கு சரியாகப்பட்டது, பின்னர் நான் நடிக்க சம்மதித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.