பெண்களை மையப்படுத்திய கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் ‘டிராலலா’ நிறுவனத்தின் முதல் முயற்சிகளில் ஒன்றாக ‘மா இண்டி பங்காரம்’ உருவானது என சமந்தா கூறுகிறார். ஆரம்பத்தில் சாய் பல்லவிக்காக எழுதப்பட்ட இந்த கதையில், அவரின் பிஸியான அட்டவணை காரணமாக மாற்றங்கள் செய்து சமந்தாவுக்கே கதாபாத்திரம் மாற்றப்பட்டது. இந்த படம் தான் என்னைத் தேர்ந்தெடுத்தது என அவர் உணர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
சமந்தா லீட் ரோலில் நடித்து நந்தினி ரெட்டி இயக்கியுள்ள படம் 'மா இண்டி பங்காரம்'. சமந்தா நடிப்பில் மூன்று ஆண்டுகள் கழித்து வெளியாகவுள்ள படம் என்பதாலும், ஒரு ஆக்ஷன் படம் என்பதாலும் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் இப்படத்தை சமந்தாவே தனது தயாரிப்பு நிறுவனமான 'டிராலலா' (Tralala) மூலம் தயாரித்துள்ளார். இப்படம் ஜூன் 19-ம் தேதி வெளியாகிறது.
இப்படத்திற்கான புரோமோஷன் நிகழ்வுகளிலும் சமந்தா பங்கேற்று வருகிறார். மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிலளித்து வந்தவர், இந்தப் படத்தில் முதலில் சாய் பல்லவி நடிக்கவிருந்ததாக தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறிய போது "என் தயாரிப்பு நிறுவனமான 'டிராலலா' (Tralala) நிறுவனத்தின் முக்கிய நோக்கமே பெண்களை மையப்படுத்திய கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான். அந்த வகையில், இந்த 'மா இண்டி பங்காரம்' படத்தின் கதையை முதலில் நடிகை சாய் பல்லவியை மனதில் வைத்துதான் உருவாக்கினோம். அவருக்கே கதையை முதலில் கொண்டு செல்லவும் நினைத்தோம்.
ஆனால், சாய் பல்லவி அப்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால், அவருக்கு இதற்கான நேரம் கிடைக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். அதனால், அந்தப் படத்தின் இயக்குநர்கள் என் கதாபாத்திரத்திற்கும், எனக்கு ஏற்றவாறு கதையில் சில மாற்றங்களைச் செய்தார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தத் திரைப்படத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை; இந்தத் திரைப்படம்தான் என்னைத் தேர்ந்தெடுத்தது," எனக் கூறியிருக்கிறார். இந்தப் பதிவை பார்த்த நடிகை சாய் பல்லவி அவருடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, "'மா இண்டி பங்காரம்' திரைப்படம் உங்களை வந்தடைய வேண்டும் என இருந்திருக்கிறது." எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.