ரிஷிகாந்த் ஹீரோவாக அறிமுகமாகும் ‘மொத ராத்திரி’ படம், ஒரு கிராமத்து திருமண இரவை மையமாகக் கொண்டு நகைச்சுவை, உணர்வு, புதுமையான திருப்பங்களால் நிரம்பிய முழு பொழுதுபோக்கு என கூறப்படுகிறது. அனிஷ்மா அனில்குமார் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை ராஜா கருப்பசாமி இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளார்கள். உலகமெங்கும் ஆகஸ்ட் 21 அன்று வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள படம் ‘மொத ராத்திரி’. இதில் சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு சாதாரண கிராமத்து திருமணத்தை சுற்றி நடக்கும் இந்த படத்தின் முழுக் கதையும் ஒரே இரவில் நடைபெறுவதால், ஒவ்வொரு காட்சியும் சிரிப்பையும் புதுமையான திருப்பங்களையும் கொண்டிருக்கும் என சொல்லப்படுகிறது. சிறப்பான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ரிஷிகாந்த், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‘சிறை’ மற்றும் ‘யூத்’ திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்ற அனிஷ்மா அனில்குமார், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி கூறுகையில், “இந்தக் கதையை முதன்முதலாகக் கேட்டபோதே நாங்கள் சிரித்து, ரசித்தோம். இந்தக் கதையை திரையில் பார்த்தால் ரசிகர்கள் எப்படி மகிழ்ச்சியடைவார்கள் என்பதையும் அறிந்தோம். அதனால், உடனே இந்தக் கதை திரைப்படமாக உருவாக வேண்டும் என்று முடிவு செய்தோம். ஒரு திரைப்பட ரசிகராக நாம் விரும்பும் நகைச்சுவை, உணர்வுகள், நம்மைச் சுற்றியிருக்கும் கதாபாத்திரங்கள், முழுமையான பொழுதுபோக்கு என அனைத்தும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் உண்டு. இயக்குநர் ராஜா கருப்பசாமி அந்த உணர்வை மிக அழகாக திரையில் கொண்டு வந்துள்ளார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்து திட்டமிட்ட நேரத்தில் படத்தை நிறைவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்த திரைப்படத்தை உலகம் முழுவதும் ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ரசிகர்கள் சிரித்து மகிழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்றார்.
இயக்குநர் ராஜா கருப்பசாமி கூறுகையில், “ஒரு திரைப்பட இயக்குநராக எனது பயணத்தை இதைவிட சிறப்பாகத் தொடங்க முடியாது. இந்தக் கதையை நம்பி என்னை ஊக்குவித்த தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி சார் மற்றும் ஒய். ரவி சங்கர் சார் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களை வழங்கிய மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற முன்னணி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட. அவர்கள் அளித்த நம்பிக்கையும் ஊக்கமும் தான் இந்தக் கதையை நான் நினைத்தபடியே சொல்லும் தைரியத்தை அளித்தது. நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் இருந்தனர். இந்தப் படம் முடிந்த பிறகும் ரசிகர்கள் இந்தக் கதாபாத்திரங்களைப் பற்றி பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் திரையரங்குகளை விட்டு வெளியேற வேண்டும் என்பதே என் மிகப்பெரிய ஆசை” என்றார். இப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியாகிறது.