திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்த விஜய், குறுகிய காலத்தில் கட்சி தொடங்கி, மக்களின் பேராதரவில் தமிழக முதல்வராக வர உள்ளார் என ராமராஜன் பாராட்டினார். கொலை, கொள்ளை, போதை கலாச்சாரம் இல்லாத சூழல், பெண்கள் தைரியமாகச் செல்லும் பாதுகாப்பான மாநிலம், படித்தோருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் நல்லாட்சி அமைய வேண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு திரைத்துறையினரும், திரைத்துறை சங்கங்களும் வாழ்த்தினார்கள். தற்போது நடிகரும் முன்னாள் எம்பி யுமான ராமராஜன் விஜய்க்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
அந்த வாழ்த்தில் "நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் திரைத்துறையில் இருந்து வந்து குறுகிய காலத்தில் கட்சி தொடங்கி, முதன்முதலாக தேர்தலை சந்தித்து அதில் மக்களின் ஏகோபித்த பேராதரவைப்பெற்று தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கும் என் துறை சார்ந்த இனிய சகோதரர், தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு. விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரித்தாக நல்லதொரு மக்களாட்சியை நிகழ்த்தி சாதி-மத வேறுபாடற்ற, லஞ்ச லாவண்யமற்ற நிர்வாகத்தையும், அனைவருக்கும் பாதுகாப்பான அரசாகவும், கொலை, கொள்ளை, போதை கலாச்சாரம், போன்றவற்றை அறவே இல்லாமல் ஒழித்து, அனைத்து துறைகளிலும் பெண்கள் தைரியமாக சென்று வென்று வரக்கூடிய பாதுகாப்பு சூழலையும் ஏற்படுத்தி, படித்தோருக்கு உரிய வேலை வாய்ப்பினை உருவாக்கி எல்லா தரப்பு மக்களும் பயன் தரும் வாழும் மாநிலம் " தமிழகம்" என்ற நிலைக்கேற்ப சிறந்ததொரு புதிய யுக்தி ஆற்றலை கையிலெடுத்து புரட்சி கரமான ஆட்சி செய்திட இந்த அண்ணனின் அன்பான வாழ்த்துக்கள்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.