ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இந்திய திரையுலகமே காத்திருக்கிறது. இப்படம் பற்றி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே இந்தப் படத்தை யார் இயக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்தான் இந்தக் கூட்டணி இணைய உள்ளது என ஆரம்பகட்டத்தில் சொல்லப்பட்டது. ஆனால், அவர்கள் ஒரு ஜாலியான படத்தை எதிர்பார்த்ததாகவும், அந்த பாணி படம் தனக்கு வராது எனவும் அப்படத்தில் இருந்து விலகினேன் என சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் லோகேஷ் கனகராஜ் கூறினார்.
இப்போது ரஜினிகாந்தின் 173வது படத்தை சிபிசக்கரவர்த்தி இயக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரஜினி - கமல் இணையும் படம் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார்தான் இயக்குகிறார். தற்போது இப்படத்துக்கான புரோமோ படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இந்தக் கூட்டணியை இயக்கப் போவது நெல்சன்தான் என சொல்கிறது கோலிவுட் வட்டாரம்.
தற்போது ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள `ஜெயிலர் 2' படம் ஜூன் 12 வெளியாகும் என ரஜினி கூறியிருந்தார். ஆனால், படத்தின் வெளியீட்டு 'ஜெயிலர்' முதல் பாகத்தை போலவே, இந்த பாகமும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. சிபி சக்கரவர்த்தி இயக்கும் படம் ஏப்ரல் மாதம் துவங்க உள்ளது. இதற்கிடையில் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் புரோமோ ஓரிரு மாதங்களில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.