`வஞ்சி' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய பேரரசு, "பிரசாத் லேப் மேடை, இப்போது ஓர் இசை வெளியீடு என்றாலும் மனது ஏனோ கனத்துப் போய்தான் இருக்கிறது. இதற்குமுன் இந்த மேடையில் `மக்கள் தலைவா' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் நான் நடித்திருந்தேன், அந்த இசை வெளியீட்டு விழாவுக்கு இயக்குநர், திரைக்கதை மன்னர், எங்கள் மானசீக குரு கேபாக்யராஜ் அவர்களும் கலந்துகொண்டார். அதுதான் அவர் கலந்துகொண்ட கடைசித் திரை நிகழ்வு. அவரை இப்போது இழந்துவிட்டோம்.
கடந்த ஒரு மாதத்திலேயே பெரும் இமயங்கள், பெரும் கலைஞர்களின் இழப்பு நிகழ்ந்துவிட்டது. அது எங்கே போனாலும் பாரமாகவே இருக்கிறது. பாரதிராஜா, பாக்யராஜ் என்பது வெறும் பெயரல்ல, வரலாறு. இந்த திரையுலகில் இன்னும் எத்தனை தலைமுறை இயக்குநர்கள் வந்தாலும் சரி, அவர்களை மறக்க முடியாது, மறக்கவும் கூடாது. பாரதிராஜா என்ற ஓர் இயக்குநர் வெற்றியடையவில்லை என்றால், கிராமத்திலிருந்து பல இயக்குநர்கள் கிளம்பி வந்திருக்க மாட்டார்கள். பாக்யராஜ் சாரின் படங்கள் வெற்றி பெற்றதும்தான் எதார்த்தமான படங்கள் வெற்றி பெறும் என நம்பிக்கை வந்தது.
தமிழக முதல்வர் விஜய்க்கு ஒரே வேண்டுகோள்தான். இயக்குநர் எனச் சொன்னாலே பாரதிராஜா பெயரும், திரைக்கதை என்று சொன்னாலே பாக்யராஜ் பெயரும்தான் நினைவுக்கு வரும்.
ஒரு சினிமாக்காரனாக எங்களுடைய கோரிக்கை, தமிழக அரசு சார்பில் விருது வழங்கும்போது சிறந்த இயக்குநருக்கான விருதை பாரதிராஜா சார் பெயரிலும், சிறந்த திரைக்கதைக்கான விருது கே பாக்யராஜ் பெயரிலும் வழங்கப்பட வேண்டும். இதுதான் அவர்களுக்கு நாம் காட்டும் நன்றிக்கடனாக இருக்கும்" என்றார்.