தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருடைய மறைவுக்கு பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலித்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது மறைவுக்கு ஆந்திர துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண் தனது அஞ்சலியை பதிவு செய்துள்ளார்.
அக்குறிப்பில் "இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா காலமானார் என்பதை அறிந்து நான் மிகவும் வேதனை அடைகிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். திரு. பாரதிராஜா தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் தனது முத்திரையை பதித்துள்ளார். கிராமப்புறச் சூழல், கிராம மக்களின் வாழ்க்கை, காதல் மற்றும் பதின் பருவத்தினரின் ஈர்ப்புகளைக் காட்டுவதில் அவரது பாணி தனித்துவமானது. அவர் இயக்கிய தெலுங்கு திரைப்படமான ‘சீ தாகோகச் சிலுகா’ இன்றும் பார்க்கத் தகுந்தது. அப்படத்தின் பாடல்களும் காட்சிகளும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
எனது மூத்த சகோதரர் திரு. சிரஞ்சீவியுடன் இணைந்து ‘ஆராதனா’ திரைப்படத்தை உருவாக்கினார். அதில், ‘அரே ஏமைந்தி...’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. உணர்வுபூர்வமான காதல் மற்றும் சென்டிமென்ட் கதைகளைத் தவிர, ‘எர்ர குலாபிலு’ மற்றும் ‘டிக் டிக் டிக்’ போன்ற திரில்லர் திரைப்படங்கள் மூலமாகவும் அவர் பார்வையாளர்களைக் கவர்ந்தார். திரு.பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என எழுதியுள்ளார்.