சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள படம் `பராசக்தி'. சிவாவின் 25வது படமாக உருவாகியுள்ள இந்தப் படம், நாளை (ஜன10) வெளியாகவுள்ளது. சென்னையில் `பராசக்தி' கண்காட்சி நடைபெற்றதுபோல, திருச்சியிலும் THE WORLD OF PARASAKTHI கண்காட்சி துவங்கியுள்ளது. நேற்று மாலை இந்த துவக்க விழாவில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் சிவகார்த்திகேயன் பேசியபோது, "இந்தப் படம் செய்வதற்கு முக்கியமான காரணம், இந்தக் கதை உண்மையான சம்பவங்களை மையப்படுத்தியது. அதுவும் மண் மொழிக்காக, மண்ணுக்காக, தமிழுக்காக உயிர்நீத்த பலருக்கும் மரியாதை செய்யும் படம். இவ்வளவு நேர்மையான விஷயங்கள் படத்தில் இருப்பதால்தான், இத்தனை நடிகர்கள் இதில் நடிக்க சம்மதித்தனர். அதர்வா சின்னத்துரை என்ற பாத்திரத்தில் என் சகோதரனாக நடித்திருக்கிறார். இப்போது உண்மையிலேயே என்னுடைய சகோதரர் ஆகிவிட்டார். ஸ்ரீலீலாவின் டான்ஸ், அழகு அவற்றை தாண்டி அவரும் ஒரு புரட்சியாளராக நடித்திருக்கிறார். மாணவர்களுக்கு என்ற ஒரு சக்தி இருப்பதை பிரதிபலிக்கும் ரத்னமாலா என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். ரவி மோகன் சாரிடம் நேற்றுகூட சொல்லிக் கொண்டிருந்தோம். என் பார்வையில் அவர் வில்லன், அவர் பார்வையில் நான் வில்லன். அப்படிதான் அவர் பாத்திரம் இருக்கிறது. 35 படங்களுக்கு மேல் நடித்த ஒருவர் வந்து இந்த பாத்திரத்தை ஒப்புக்கொள்ளவைத்து இது வில்லன் ரோல் என்பதால் மட்டுமல்ல, இதில் பல அடுக்குகள் உள்ளது. அவர் ஸ்டைலிஷ் வில்லன் மட்டும் என நினைக்காதீர்கள் கொடூரமான வில்லன்.
எங்கள் எல்லோரையும் படத்தில் கொண்டுவந்து சேர்த்தது சுதா மேடம். அவரின் `இறுதிச்சுற்று', `சூரரைப்போற்று' படங்களை நீங்க எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அதன் பிறகு அவர் செய்துள்ள படம் ’பராசக்தி’. அவருடைய கதையும், முயற்சியும் தான் நாங்கள் ஒன்றிணைந்து வரக் காரணம். வலுவான கூட்டணி வலுவான படத்தோடு வருகிறது. நீங்கள் பார்த்து ஆதரவு தாருங்கள்.
சில படங்களில் ஹீரோவை உயர்த்திச் செய்வோம். ஆனால் இந்தப் படத்தில் நீ பெரிய ஆள், நான் பெரிய ஆள் என்றில்லை. இந்த மண்ணும் மக்களும் ரொம்ப ரொம்ப உயர்வானவர்கள். அவர்களுக்குள் உள்ள போராட்டக் குணத்திற்கு வணக்கம் சொல்லத்தான் படம். பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளுக்கு இப்படத்தை காண்பித்து, அப்போராட்டங்கள் பற்றி கூறுங்கள். ஒவ்வொரு படம் வெளியாகும் முன்பும் ஒரு பதற்றம் இருக்கும். ஆனால் நான் ஒன்றை மட்டும் நம்புகிறேன், நம்முடைய Intentம் Contentம் நன்றாக இருந்தால், படம் நன்றாக இருக்கும். அப்படி தான் இந்தப் படத்தை செய்திருக்கிறோம்" என்றார்.