பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு PK ரோஸி திரைப்பட விழா. ஐந்தாம் ஆண்டாக இந்த வருடம் ஏப்ரல் 8 - 12 வரை நடைபெற்றது. நேற்றோடு இந்த நிகழ்வு நிறைவடைந்தபோது, அதில் கலந்து கொண்ட இயக்குநர் பா.இரஞ்சித் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
விஜயின் ’ஜனநாயகன்’ படம் கசிந்தது குறித்து அவரிடம் கேட்கப்பட, "ரொம்ப கவலையானது, மிக தவறான செயலும்கூட. இதை ரிலீஸ் செய்ய எப்படி மனது வந்தது என்று தெரியவில்லை. பல கோடி ரூபாய் பணம் மட்டுமல்ல நடிகர்களின், தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு இருக்கிறது. அது பரவுவதைத் தடுக்க முடியாமால் இருப்பதே கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. இது சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். நீதி கிடைக்க வேண்டும். அதேசமயம், பைரஸியை ஒழிப்பது என்பது வாய்ப்பே இல்லாத ஒன்று. மக்கள் முன்வந்து, பைரஸியில் படம் பார்ப்பதை நிறுத்தினால் மட்டுமே, இதனை தடுத்து நிறுத்த முடியும். திரைப்படத் தயாரிப்பு இருப்பது போலவே, திரைப்படங்கள் திருட்டுத்தனமாக வெளியாவதும் இணைத்தே வளர்ந்து கொண்டிருக்கும் சூழல் இது. அதைத் தடுக்க முயற்சிக்கும் அதேவேளையில் மக்களும், இவற்றை ஊக்குவிக்க கூடாது என்ற பயிற்சிக்குள் வர வேண்டும். அதன்மேல் உள்ள ஆர்வம் குறையும்போது, மாற்றம் நிகழும் என நினைக்கிறேன்" என்றார்.