தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் தமன். தெலுங்கில் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதர்வாவின் `இதயம் முரளி' படம் மூலம் மீண்டும் நடிகராகவும் வருகிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமா பயணம் பற்றி பல விஷயங்களைப் பேசி இருந்தார்.
இதில், உங்களுக்கு ராஜமௌலி போன்ற பெரிய இயக்குநர்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா எனக் கேட்கப்பட, "கீரவாணி இருக்கிறார், அவருக்குப் பின் அவரது மகன் கால பைரவா இருக்கிறார். நமக்கு வேண்டியது ஏற்கனவே நம்மிடம் இருக்கிறது. த்ரி விக்ரத்துடன் இணைந்து செய்கிறேன் எனது பாகுபலியை. பாபியுடன், கோபிசந்த் மலினேனியுடன் நான் செய்து கொள்கிறேன் எனக்கு வேண்டியதை. அவர்களால் முடியாததா என்ன? எல்லாம் கற்றல்தானே.
ரஹ்மான் ஆஸ்கர் வென்றார். நாமும் ஆஸ்கரை வெல்ல முடியும், ’இந்தப் பாதையில் செல்லுங்கள்’ என அவர் ஆஸ்கரை நோக்கிய சாலையை எங்களுக்குப் போட்டு கொடுத்துவிட்டார். அந்தச் சாலையில் நாம் பயணித்து ஆஸ்கர் வாங்கி வருவோம். ’ஸ்லம்டாக் மில்லியனர்’ பட இயக்குநரே எனக்கும் ஆஸ்கரை பெற்றுத்தர வர வேண்டிய அவசியமில்லை.
ராஜமௌலியுடன் பணியாற்றிய கீரவாணிக்கு கிடைத்ததே. அப்படி த்ரி விக்ரம் மூலம் ஏதோ ஒருநாள் எனக்கும் ஆஸ்கர் கிடைக்கட்டும். அதற்காகப் பணியாற்றுவோம். அவருடன் பணியாற்ற உள்ள ’GOD OF WAR’ படத்தில் அது நடக்கட்டும் என வேண்டிக் கொள்கிறேன்" என்றார்.