Radhikaa Thaai Kizhavi
கோலிவுட் செய்திகள்

என் குரு பாரதிராஜாவின் கடைசி பாராட்டு! - நெகிழ்ந்து பேசிய ராதிகா | Radhikaa | Thaai Kizhavi

என் முதல் படம் `கிழக்கே போகும் ரயில்' ஒருவருடம் ஓடியது. அதற்கான கேடயத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கொடுத்தார். அதன் பிறகு பல படங்களுக்கு கேடயம் வாங்கி இருக்கிறேன்.

Johnson

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா, சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், ரெபேக்கா எனப் பலரும் நடித்த படம் `தாய் கிழவி'. இப்படத்தின் 100வது நாள் விழா' சில தினங்களுக்கு முன் ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய ராதிகா "எல்லோருக்கும் நிறைய வாழ்த்துகள் சொல்லி, நிறைய கொண்டாடி, நிறைய ரசித்துவிட்டோம், பெரிய வெற்றியும் பார்த்துவிட்டோம். இன்று இந்த 100வது நாள் விழாவுக்கு அழைத்து கேடயம் கொடுக்க நினைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றியும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். என் முதல் படம் `கிழக்கே போகும் ரயில்' ஒருவருடம் ஓடியது. அதற்கான கேடயத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கொடுத்தார். அதன் பிறகு பல படங்களுக்கு கேடயம் வாங்கி இருக்கிறேன். இப்போது மீண்டும் இந்த கேடயத்தை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அனுபவத்தை உங்களுக்கும் கொடுக்க நினைத்த உள்ளத்துக்கு தான் முதல் நன்றி.

எனக்கு இந்தப் படத்தில் இரண்டு வருத்தம் இருந்தது. என் இயக்குநரும், என் அம்மாவும் இந்தப் படத்தை பார்க்க முடியவில்லை என. ஆனால் எதார்த்தமாக என் குரு பாரதிராஜா அவர்களை பார்க்க சென்ற போது, அங்கிருந்த நர்ஸ் `உங்களை பற்றி தான் பேசிக் கொண்டே இருந்தார்' என்றார்கள். என்ன பேசி இருப்பார் என ஆச்சர்யத்தோடு சென்றேன். பாரதிராஜா சார் `படம் பார்த்தேன் சூப்பர், டைரக்டர் சூப்பர்' என்றார். அவர் இறந்த பின்னர் சிவக்குமாரிடம் கூறினேன், என் டைரக்டர் பாராட்டிய கடைசி இயக்குநர் நீங்கள் தான். அவர் பெயரை காப்பாற்றுங்கள் என்று சொன்னேன்.

சமீபத்தில் குஷ்பூ வீட்டு கல்யாணத்துக்கு சென்ற போது சிரஞ்சீவி வந்திருந்தார். என்னை பார்த்ததும் `தாய்க் கிழவி சூப்பர்' என்றார். அவர்கள் குடும்பமாக பார்த்து ரசித்திருக்கிறார்கள். இதெல்லாம் மிக நேர்மையான வெளிப்பாடுகள். இந்தப் பட வெற்றியையும் தாண்டி பெண் முன்னேற்றம் பற்றி இந்தப் படம் பேசிய கருத்து பலரையும் சென்று சேர்ந்திருக்கிறது. அது பெரிய வெற்றி." என்றார்.