விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான `முண்டாசுப்பட்டி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராம்குமார். ஒரு கிராமத்தில் இருக்கும் மூடநம்பிக்கையை மையமாக வைத்து உருவான காமெடி படமாக இது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு மீண்டும் விஷ்ணு விஷால் நடிப்பில் ஒரு சீரியல் கில்லர் கதையை `ராட்சசன்' படமாக இயக்கி மீண்டும் வெற்றி பெற்றார் ராம்குமார்.
இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 8 வருடங்களாக இவர் இயக்கத்தில் படம் எதுவும் வராமலே இருந்தது. இடையில் தனுஷ் நடிப்பில் ஒரு படம் இயக்கவுள்ளார் என தகவல்கள் வெளியானாலும், அது துவங்கும் அறிகுறி கடைசிவரை இல்லாமலே இருந்தது. அதற்குப் பிறகு ராம்குமார் இயக்கும் மூன்றாவது படத்திலும் விஷ்ணு விஷால் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார் எனவும் `இரண்டு வானம்' எனப் பெயரிடப்பட்ட இப்படத்தை சத்ய ஜோதி தயாரிக்கிறது எனவும் அறிவிக்கப்பட்டது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது.
அதன் பிறகு இப்படம் என்ன ஆனது என எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் இன்று இப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இப்படம் கோடை வெளியீடாக ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர். இரண்டு படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த ராம்குமாரின் அடுத்த படம் பல ஆண்டுகள் கழித்து வெளியாகிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.