இஸ்லாமியர்கள் ஏன் சினிமாவில் தீவிரவாதிகளாக மட்டுமே காட்டப்படுகிறார்கள் என்ற எழுத்தாளர் அமீனின் கேள்வியிலிருந்து ‘ஹபீபி’ உருவானது என யுகபாரதி விளக்கினார். எண்பதுகளுக்கு முன் நல்லவர்களாக சித்தரிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் பின்னர் எதிர்மறையாக காட்டப்பட்டதை விவாதித்த இயக்குநர்கள், உண்மையை உணர்ந்த மீரா கதிரவனிடம் இந்தக் கதையை உருவாக்கச் சொன்னதாக அவர் கூறினார்.
மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரிராஜா நடித்து வெளியான படம் `ஹபீபி'. இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய யுகபாரதி "25 வருடங்கள் முன்பு, உதவி இயக்குநராக ஆவதற்கு முன்பே மீரா கதிரவனை எனக்கு தெரியும். தனிப்பட்ட முறையில் இப்படியான வெற்றிக்குதான் இத்தனை வருடங்களாக அவர் கடுமையாக உழைத்தார். இதனை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, கஸ்தூரி ராஜா அவர்களை நடிகராக பார்ப்பது மகிழ்ச்சி. இனி வரும் வெற்றிப் படங்களில் எல்லாம் கஸ்தூரி ராஜாதான் அப்பாவாக தப்பாமல் இருப்பார்.
இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவில் வரவில்லை எனும் சொல்லுமளவுக்கு இஸ்லாமியர்கள் வாழ்வியலை இந்தப் படத்தில் மீரா கதிரவன் பேசியிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்தின் எழுத்தாளர் அமீன் ஏன் சினிமாவில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக காட்டப்படுகிறார்கள் எனக் கேட்டார். அதன் பின்னர் இது குறித்து ஒரு விவாதம் நடத்தினோம். அதில் பல இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ் சினிமாவில் எண்பதுகளுக்கு முன்பு எடுத்த சினிமாக்களில் எல்லா இஸ்லாமியர்களும் நல்லவர்களாக இருந்தார்கள், எண்பதுகளுக்கு பிறகு இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டுகிறார்கள் என அதில் பேசப்பட்டு, இறுதியாக இந்த வாழ்க்கையை முழுவதுமாக உணர்ந்தவர்கள் தான் சரியாக காட்ட முடியும் என்றார்கள். அதனால், மீரா கதிரவனை படம் எடுக்கச் சொன்னார்கள். அப்போது அவர் சம்மதம் தெரிவித்து மனதில் தாங்கிய கதையே 'ஹபீபி' ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இது படமாக வெளிவந்து வெற்றி பெற்றிருப்பது நிறைவாக உள்ளது" என்றார்.