தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை மீனா. 40 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் இயங்கி வருபவர் தற்போது மலையாளத்தில் `Roslin' என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். அது தொடர்பான பேட்டிகளையும் அளித்து வந்தவரிடம் ஒரு பேட்டியில், அவரது மனதை நோகடித்த வதந்தி என்ன என்று கேட்கப்பட, அதற்கு பதில் சொன்ன மீனா "எனக்கு இரண்டாவது திருமணம் என்று சமீப காலமாக பலரும் புரளி கிளப்பிவிடுகிறார்கள். உண்மையில் அப்படி இருந்தால் எழுதுங்கள் என விட்டுவிடலாம். இது முற்றிலும் அடிப்படையற்ற ஒன்று. நம் கூடவே இருந்து பார்த்தது போல சொல்வது மிக மோசமானது.
அப்போதெல்லாம் என்னை பற்றி எழுதுவார்கள் அது எனக்கு பெரிய விஷயமாக தெரிவதில்லை. மேலும் அது பற்றி தாமதமாக தான் தெரிய வரும். இந்த இணைய உலகத்தில் ஒரு இடத்தில் ஒரு செய்தி வந்தால், அது பலரால் பல விதமாக, மிக வேகமாக பரப்படுகிறது. அது உண்மையா இல்லையா என்பது கூட தெரியாமல் பலரும் அதை பகிர்கிறார்.
மேலும் இப்போது எனக்கு பதின் வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவருக்கும் இந்த விஷயங்கள் போய் சேரும். நான் ஒரு பெண் என்பதாலும், பிரபலம் என்பதாலும், நான் தனியாக இருப்பதாலும் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். கேட்பதற்கு ஆள் இல்லை என்ற தைரியத்தில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பது மிகவும் எரிச்சலூட்டுகிறது, துன்புறுத்துகிறது.
எப்போது என் நிதானத்தை இழக்கப்போகிறேன் என தெரியவில்லை. என்னுடைய சிந்தனைகளையோ, சக்தியையோ, நேரத்தையோ எதிர்மறையான, கெட்ட, தவறான விஷயங்களில் செலுத்த நான் விரும்பவில்லை. நான் மிகவும் நேர்மறையான, மகிழ்ச்சியை விரும்பும் நபர். அப்படித்தான் என் வாழ்க்கையை கொண்டு செல்ல விரும்புகிறேன். மேலும் கர்மா ஒரு பூமராங்" எனக் கூறியுள்ளார்.