தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. 40 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் பரபரப்பாக இயங்கி வருபவர். தற்போது `ரோஸ்லின்' என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். விரைவில் அந்த சீரிஸ் வெளியாகும் நிலையில், அதற்கான பேட்டிகளை அளித்து வருகிறார் மீனா.
அந்த பேட்டி ஒன்றில் வாய்ப்பு வந்து நடிக்க முடியாமல் போன படங்கள் பற்றி கேட்கப்பட, "எல்லாம் நாம் நினைப்பது மாதிரியே நடக்க வேண்டும் என யோசிக்கலாம். ஆனால் அது நடக்காமல் போனால் அதை ஒரு கசப்பான அனுபவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சிலசமயம், அதைவிட சிறந்த ஒன்று உங்களுக்குக் கிடைக்கலாம் என்ற மனநிலை இருந்தால் நேர்மறையான முறையில் வாழ்க்கையைச் செலுத்த முடியும். `தேவர் மகன்' படத்தில் அந்தப் பாத்திரத்தில் (ரேவதி நடித்த பஞ்சவர்ணம் பாத்திரம்), `படையப்பா' (நீலாம்பரி\வசுந்தரா இரு பாத்திரங்களுக்கும் அணுகப்பட்டார்) படத்தில் நடிக்காமல் போனது எல்லாம் எனக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய பல விஷயங்கள் செய்யும் வாய்ப்பு எனக்கு இருந்தது. அதன்பிறகு, நிறைய படங்கள் நடித்தேன். நிறைய நேர்மறையான விஷயங்கள் இருந்தது, கிடைக்காமல் போன விஷயங்களின் ஏன் கவனத்தைச் செலுத்த வேண்டும். மேலும், நான் நடிக்க முடியாமல் போனாலும் அதில் நடித்தது என் நண்பர்கள்தான். அவர்களுக்காக நான் மகிழ்கிறேன்" என்றார்.