மாஸ்டர் மகேந்திரன் Pt web
கோலிவுட் செய்திகள்

மின்வெட்டு பிரச்னை குறித்த சர்ச்சைக் கருத்து.. பேசியது ஏன்? மகேந்திரன் விளக்கம்!

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகர் மாஸ்டர் மகேந்திரன் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Premkumar S

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் நாட்டாமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் மகேந்திரன். தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து மின்வெட்டு தொடர்பான பிரச்னைகள் தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன.

இந்தசூழலில் தான், அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய மகேந்திரன், ”தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னையை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். என் வீட்டில் இருந்து கூட மின்சாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 6 மாதத்திற்கு அரசை எந்த கேள்வியும் கேட்கக்கூடாது. கேள்வி கேட்பதையே நோக்கமாக எவ்வளவு ஆண்டுகள் வைத்திருப்பீர்கள் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், அவரது கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்தசூழலில் தான், இந்த விவகாரம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் மகேந்திரன் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மின்வெட்டு விவகாரம் குறித்து தான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும், கேரள மாநிலம் கொச்சி சென்றிருந்தபோது, அங்குள்ள விமான நிலையம் சூரிய மின்சக்தி ஆற்றலில் இயங்கியதை பார்த்ததாகவும், அதைபோல் மாற்று மின் ஆற்றலை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே பேசியதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், மின்வெட்டு பிரச்னையால் பாதிக்கப்படுவர்களை விமர்சிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், இதில் யாருடைய மனம் புண்பட்டிருந்தாலும், வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.