மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்  கோப்புப்படம்
கோலிவுட் செய்திகள்

“என்னையே நான் மன்னிக்க முடியாதவனா ஆக்கிவிட்டது...!” - நேற்றைய கருத்துக்கு மன்சூர் அலிகான் வருத்தம்

PT WEB

சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமான ‘லியோ’ கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக படம் சாதனை படைத்துவருகிறது. இந்நிலையில் லியோவில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் நேற்று கூறிய கருத்தொன்று இணையத்தில் வைரலானது.

அதில் அவர் “லோகேஷ், என்ன வச்சு அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்ல... அதவுட்டுட்டு, 'தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு' !! .. இல்லைனா வாங்க, பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கி குடுக்கலாம்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அதற்கு வருத்தம் தெரிவித்து மற்றொரு கருத்தினை தெரிவித்துள்ளார்.

மன்சூர் அலிகான்

அதில் அவர் “யாவரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயின்றி யாமொன்றறியேன் பராபரமே!.. குண்டு போட்டு மனிதம் கொல்லும் நரமாமிச பட்சிகளின் உலக அரசியல் மன அழுத்தத்தில், நேற்று மீம்ஸ் போன்று நான் போட்ட பதிவு என்னையே அதிர்ச்சியடைய வைத்தது.

'லியோவில் தம்மாத்தூண்டு' என்ற சொல் பதம் என்னையே நான் மன்னிக்க முடியாதவனா ஆக்கிவிட்டது! அதற்காக லோகேஷ், அவரது குழுவினர் சக்தி, சந்தோஷ், நிமெட், கௌதம்,பாலா, ராம்குமார் ஆகியோர் எவ்வளவு மெனக்கெட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.

லோகி ஒரு திரைச் சித்தன். 3,000 பேரை வைத்து வேலை வாங்குகையில், இருக்கிற இடம் தெரியாமல் நாமெல்லாம் கைபேசியை மகிழ்ச்சிக்கு பயன்படுத்துகையில், அவர் அது போன்ற உபகரணங்களை பாத்திரங்களை படைப்பதற்கு, சதா சிந்தனையுடன் தேனீயைப் போன்று செயலாற்றுவது கண்டேன்!

சில பாத்திரப் படைப்புக்கள் நீட்ட குறைத்தலின் போது, நாம் ஒன்றும் செய்ய முடியாது. கேப்டன் பிரபாகரன் 15,000 அடி. ஆனால் எடுக்கப்பட்டது ஒரு லட்சத்து பதினாயிரம் அடி! என் வாழ்நாளில் 350'க்கும் மேற்பட்ட இயக்குனர்களுடன் நான் பணியாற்றி இருந்தாலும், லோகியைப் போன்று வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்று அலட்டிக் கொள்ளாமல் குடும்பம் மறந்து, உடலை வருத்திய படைப்பாளியை பார்த்ததில்லை. நான் தம்பி விஜய்யுடன் பல படங்களில் மெயின் வில்லனாக தேவா, நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன் என அழிச்சாட்டியம் செய்திருந்தாலும், அந்த காலகட்டம் வேறு!

இப்போது குடும்பம் குடும்பமாக, குழு குழுவாக திரையரங்கை திருவிழாவாக மக்களை மகிழ்விக்க பாடுபட வேண்டியிருக்கிறது. தவறாக வசூல் காட்டி வெளியே Hyena-வைப்போல் பலர் குறைக்கின்றனர். நான் யதேச்சையாக பேசுவது ஊடகங்களில் பலமாக பரப்படைகிறது. பிணியில் கிடக்கும் நம் மண்ணை மீட்க இனி தன்னலம் மறந்து அரசியல், திரைப் பணியில் என்னை அர்பணிப்பேன்.

என்னுடைய சொந்தப்பட படைப்பு காரணமாக லியோவில் என்னை நினைத்தபடி, உடலை வடிவமைத்து அர்ப்பணிக்க முடியவில்லை. அதற்காக நான் வருத்தப்படுகிறேன். இன்றிலிருந்து சுக, தன்னலம் துறந்த மன்சூர் அலிகான் மக்களுக்காக, மண்ணின் பெருமைக்காக! சக்சஸ் மீட்டில் நவம்பர் ஒன்றாம் தேதி சந்திப்போம்...” என்று பதிவிட்டிருக்கிறார்.